அமெரிக்காவில் ஆசிரியரைச் சுட்டுக் கொன்ற 7ம் வகுப்பு மாணவன் தற்கொலை: 2 மாணவர்கள் படுகாயம்

அமெரிக்காவில் கலிபோர்னியா அருகே, வடமேற்கு நிவாடாவில் உள்ள ஸ்பார்கஸ் நடுநிலைப்பள்ளியில் நேற்று பள்ளி ஆண்டுவிழா நடந்துள்ளது. அப்போது பள்ளி வளாகத்தில் கூடைப்பந்து மைதானம் அருகே 7-வது வகுப்பு படிக்கும் 12 வயது மாணவன் ஒருவன் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் தனது நண்பர்களை சுட்டுள்ளான்.
இந்த திடீர் தாக்குதலால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓட்டம் பிடித்துள்ளனர். இதனை தொலைவில் இருந்து கண்ட கணித ஆசிரியர் மைக்கேல் லேண்ட் பெர்ரி (45), ‘சுடாதே..' என எச்சரித்த படியே மாணவனை நோக்கி விரைந்து வந்துள்ளார்.
தன்னை தடுத்து நிறுத்த முயற்சித்த ஆசிரியரையும் மாணவர் சுட்டுள்ளார். இதில், துப்பாக்கி குண்டு பாய்ந்து அதே இடத்தில் ஆசிரியர் பலியானார். இந்த துப்பாக்கி சூட்டில் மேலும் 2 மாணவர்கள் காயம் அடைந்தனர். இவர்களில் ஒருவனுக்கு தோளிலும், மற்றொருவனுக்கு அடி வயிற்றிலும் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. இவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே துப்பாக்கியால் சுட்ட மாணவன் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டான்.
இது குறித்து அப்பள்ளியில் பயிலும் மற்ற மாணவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மாணவன் வீட்டிலிருந்து துப்பாக்கி எடுத்து வந்தது மட்டும் தெரிய வந்துள்ளது. மற்றபடி, மாணவன் எதற்காக துப்பாக்குச் சூடு நடத்தினான் என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications