ஈராக் விரைந்தது அமெரிக்கபடை: ஐநா ஊழியர்கள் வெளியேற்றம்
பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தை சதாம் ஆதரவு படைகள் கைப்பற்றிவிடும் என்ற அச்சத்தின் காரணமாக, ஐநா மற்றும் அமெரிக்கா அதிகாரிகள் பாக்தாத்தில் இருந்து அவசரமாக வெளியேற்றப்படுகிறார்கள். அமெரிக்கா தனது நாட்டு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்க படைவீரர்களை ஈராக்கிற்கு அனுப்பியுள்ளது.
'ஈராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய நாடு (ஐஎஸ்ஐஎஸ்)' என்ற பெயரிலான சன்னி பிரிவு தீவிரவாத அமைப்பு, ஈராக்கில் திடீர் எழுச்சி பெற்று முக்கிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துகொண்டுள்ளது. தலைநகர் பாக்தாத் விரைவில் வீழும் சூழ்நிலை எழுந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு ஐநா சபையில் இருந்து ஈராக்கில் பணியாள்ளி வந்த, 60 அதிகாரிகள் உடனடியாக அண்டை நாடான ஜோர்டானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல அமெரிக்காவும், பாக்தாத்திலுள்ள தனது தூதரக அதிகாரிகளை தற்காலிகமாக அந்த நாட்டின் எர்பில், பாஸ்ரா அல்லது ஜோர்டான் தலைநகர் அம்மான் ஆகியவற்றில் எங்காவது தஞ்சம் புகுமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும் தனது நாட்டு அதிகாரிகளை பாதுகாக்க 250 பாதுகாப்பு வீரர்களை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. பாக்தாத்திலுள்ள அமெரிக்க தூதரகம்தான் உலகிலேயே மிகப்பெரிய தூதரகமாகும். இங்கு 5ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள்.
சதாம் ஆதரவு படைகளுடன் சண்டையிட அமெரிக்கா தனது படைகளை அனுப்ப போவதில்லை என்று அந்த நாட்டு அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். அதே நேரம் வான்வழி தாக்குதல் நடத்த அமெரிக்க திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications