அமெரிக்காவில் இயற்கை விவசாயம் செய்யும் தமிழர்கள்!
செயிண்ட் லூயிஸ்(யு.எஸ்): தமிழகத்தில் மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களுக்கு ஆதரவாக சிலரும், அதற்கு எதிராக இயற்கை விவசாயத்தை ஆதரித்தும் தொலைக்காட்சியில் சண்டை போட்டுக்கொண்டிருக்கும் வேளையில், சத்தமில்லாமல் அமெரிக்காவில் இயற்கை விவசாயம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.
அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் நகரில் நலவாழ்வு நண்பர்கள் என்ற குழுவினர், இயற்கை விவசாயம் மூலம் வீட்டு தோட்டங்கள், சமூக தோட்டங்கள் அமைக்க முயற்சி எடுத்துள்ளனர்.

நம்மாழ்வார் நினைவு விதை நாள்
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மறைந்த டிசம்பர் 30 நாள் தமிழகத்தில் விதை நாள் என கடைப்பிடிக்கப்படுகிறது. அந்நாளில் மாற்றியமைக்கபடாத உணவு விதைகளைப் பாதுகாக்க வேண்டிய தேவையைப் பற்றி பேசி விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் நோக்கமாகும். அதே நாளில் அமெரிக்காவிலும் விதை நாளை அனுசரித்து இயற்கை விவசாயம் செய்வதற்கான முயற்சியில் கலந்துரையாடல் நடைபெற்றது.
அமெரிக்க வீடுகளின் பின்புறம் தோட்டங்கள் அமைக்க ஏதுவாக இட வசதி உண்டு. அதில், தங்கள் மற்றும் நண்பர்கள் குடும்பங்களுக்கு தேவையான காய்கறிகளை பயிரிடுவது வழக்கம். வீட்டுத் தோட்டங்களை முற்றிலும் இயற்கை முறையில் மாற்றி அமைக்க நலவாழ்வு நண்பர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதை மற்ற நகரிங்களிலும் 'நலவாழ்வு நண்பர்கள்' என்ற குழுக்களாக விரிவுபடுத்த உள்ளனர். டாக்டர் பானுகோபன் இயற்கை உரம் தயாரிப்பது, பூச்சி மற்றும் களைகளைக் கட்டுப்படுத்துவது, உள்ளிட்ட பல விவரங்களை எடுத்துரைத்தார். சொட்டு நீர்ப் பாசனம், பல்பயிர் வேளாண்மை குறித்தும் விவரித்தார்.

மீண்டும் முக்கியத்துவம் பெறும் சிறுதானியங்கள்
இயற்கை விவசாயம் மட்டுமல்லாமல், சிறுதானியங்கள் உணவுப் பழக்கங்களுக்கு திரும்புவதற்கும் இந்த குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதற்கான சிறுதானிய உணவு வகைகளை தயாரித்து விருந்து படைத்தனர். அதை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்தும் செய்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
சோளப் பணியாரம், ராகி பக்கோடா, மருந்து குழம்பு, கொள்ளு ரசம், நெல்லிக்காய் சாதம், ராகி புட்டு, குதிரைவாலி உப்புமா, கேப்பைக் கூழ், சோள இடியாப்பம், உளுந்து சாதம், எள்ளு சட்னி, கம்பு அல்வா உள்ளிட்ட ஏராளமான உணவுப் பண்டங்கள் விருந்தில் இடம்பெற்றன.
அடி மண்ணுக்கு, நுனி வீட்டுக்கு..
இயற்கை விவசாயத்தின் முக்கிய அம்சங்களான, "அடி - மண்ணுக்கு, நுனி - வீட்டுக்கு, நடு - மாட்டுக்கு" என்ற அணுகுமுறையை நினைவுகூறியோதுடு, உளுந்து மற்றும் நிலக் கடலைச் செடிகள் மண்ணுக்கு உரமாக மாறுகின்றன, அதன் நன்மைகள் என்ன என்பது போன்ற தீவிர விவசாயப் பயிற்சி கலந்துரையாடலும் இடம்பெற்றன.

நம்மாழ்வாரின் பேச்சுக்களை வீடியோவில் திரையிட்டனர். அவருடனான நேர்முக அனுபவங்கள் குறித்தும் யசோதா பொற்செழியன் உரையாற்றினார். இளங்கோ - யசோதா தம்பதியினர் முன்னின்று ஏற்பாடுகளை செய்திருந்தனர். செயிண்ட் லூயிஸ் நண்பர்கள், வரும் பருவகாலத்தில் இயற்கை விவசாயம் செய்யவும் முடிவு செய்துள்ளார்கள். அடுத்த கட்டமாக அமெரிக்கத் தமிழர்கள் மத்தியில் 'வீட்டுத் தோட்டத்தில் இயற்கை வேளாண்மை' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சி எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கர்களும் இயற்கை உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். 'NonGMO' என்ற முத்திரையுடன் பொருட்கள் விற்கப்படுகின்றன. ஆர்கானிக் உணவுப் பொருட்களுக்கென்றே பிரத்தியேக அங்காடிகளும் இருக்கின்றன. இந் நிலையில், தமிழர்களின் இயற்கை வேளாண்மையும் அங்கே காலூன்றி பரவலானால் ஆச்சரியமில்லை!












Click it and Unblock the Notifications