'பங்கர் பஸ்டர்'.. ஈரான் கதையை முடிக்க அமெரிக்கா எடுக்கும் ஆயுதம்! விஸ்வரூபம் எடுக்கும் டிரம்ப்
வாஷிங்டன்: இஸ்ரேல் இதுவரை நடத்திய தாக்குதலில், ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகளில் பெரிய அளவுக்கு சேதம் ஏற்படவில்லை. ஆனால், அமெரிக்கா நினைத்தால் மொத்தத்தையும் அழித்துவிட முடியும். அப்படி என்ன ஆயுதங்களை அமெரிக்கா கொண்டிருக்கிறது? அது எவ்வளவு வீரியமானது? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
'பங்கர் பஸ்டர்கள்'
'பங்கர் பஸ்டர்கள்' (Bunker Busters)! மலைக்களுக்குள் இருக்கும் ஈரானின் அணுசக்தி கட்டமைப்பை முழுவதுமாக அழிக்க அமெரிக்கா ரெடி செய்து வைத்திருக்கும் ஆயுதத்தின் பெயர்தான் இது. இன்னும் துல்லியமாக சொல்ல வேண்டும் எனில், GBU-57 Massive Ordnance Penetrator (MOP) எனும் குண்டுதான் இந்த வேலையை சரியாக செய்யும். நிலத்திற்கு அடியில் இருக்கும் பதுங்கு குழிகளை அழிப்பதற்கு என்றே தனியாக உருவாக்கப்பட்ட குண்டுகள்தான் இது.

B-2 விமானம்
இந்த குண்டை எல்லா விமானங்களிலும் பயன்படுத்த முடியாது. இதற்காக தனிச்சிறப்பாக வடிவமைக்கப்பட்ட B-2 Spirit stealth bombers விமானங்களால் மட்டுமே குண்டை போட முடியும். இந்த விமானம், ரேடார் கண்களில் மண்ணை தூவி, எதிரி நாட்டுக்குள் நுழைந்து குண்டு வீசிவிட்டு பத்திரமாக திரும்பும். GBU-57 குண்டுகள் GPS உதவியுடன் இலக்குகளை துல்லியமாக தாக்கும். சுமார் 2 டன் TNT வெடிபொருள் எந்த அளவுக்கு பாதிப்பை வெளியிடுமோ, அந்த அளவுக்கு இந்த குண்டு வீரியமானது.
பங்கர் பஸ்டர்களின் நோக்கம்
உதாரணத்திற்கு, 20 மாடி கட்டிடத்தின் மீது இந்த குண்டை போட்டால், அது தரைத்தளம் வரை ஊடுருவி பின்னர் வெடிக்கும். எனவே இந்த கட்டிடத்தில் நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும், உங்களால் உயிர் பிழைக்க முடியாது. அதேபோல மலைகளுக்கு உள்ளே இருக்கும் ஈரானின் அணுசக்தி மையங்களை இது தாக்கி அழிக்கும். இந்த குண்டு அணு சக்தி மையங்களை அழிக்கவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. பலத்த சேதத்தை ஏற்படுத்துவதன் மூலம், அணு சக்தி மையத்தில் கதிர்வீச்சு கசிவை தூண்டி, எதிரியை நிலைக்குலைய செய்கிறது.
முதல் முறை பயன்பாடு
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், இதற்கு முன்னர் இந்த குண்டை அமெரிக்கா வேறு எங்கேயும் பயன்படுத்தியது கிடையாது. ஈராக்கில் சதாம் உசேன் ஆட்சியில், அவர்கள் அணு குண்டை தயாரிக்கிறார்கள் என்று சொல்லி, அந்நாட்டின் அணு சக்தி மையங்களின் மீது தாக்குதலை அமெரிக்கா நடத்தியிருந்தது. இதில் அமெரிக்கா சக்திவாய்ந்த குண்டுகளை பயன்படுத்தியிருந்தது என்று சொல்லப்பட்டாலும், GBU-57 பயன்படுத்தியதற்கான எந்த ஆதாரமும் இல்லை.
இப்படி இருக்கையில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா வெளிப்படையாகவே எச்சரித்து வருகிறது. போரில் இதுவரை நேரடியாக ஈடுபடாமல் இருந்த அமெரிக்கா, இனி GBU-57 குண்டை பயன்படுத்துவதன் மூலம் சீனுக்குள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரானின் பலம்
அதேபோல பதிலுக்கு ஈரான் வசம் இருக்கும் ஏவுகணைகள் குறித்தும் பார்ப்போம். ஈரான் அதிக அளவில் பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை வைத்திருக்கிறது. இவை ஆரம்பத்தில் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை செலுத்தப்பட்டு, பின்னர் புவியீர்ப்பு விசையின் காரணமாக இலக்கை நோக்கி விழும். இந்த ஏவுகணைகளை ஒரு முறை ஏவி விட்டால், பின்னர் நாமே நினைத்தாலும் அதை தடுக்க முடியாது.
பாலிஸ்டிக் ஏவுகணை வகைகள்
போர்க்கள பாலிஸ்டிக் ஏவுகணை (BRBM) - 200 கி.மீ க்கும் குறைவான தூரம் கொண்டது
குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை (SRBM): 1,000 கி.மீ க்கும் குறைவான தூரம் கொண்டது
நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணை (MRBM): 1,000-3,000 கி.மீ தூரம் கொண்டது
இடைப்பட்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணை (IRBM): 3,000-5,500 கி.மீ தூரம் கொண்டது
கண்டங்களுக்கு இடையேயான பாலிஸ்டிக் ஏவுகணை (ICBM): 5,500 கி.மீ க்கும் அதிகமான தூரம் கொண்டது
பாலிஸ்டிக் ஏவுகணை எப்படி பயணிக்கிறது?
பூஸ்ட் ஸ்டேஜ், மிட்கோர்ஸ் ஸ்டேஜ், டெர்மினல் ஸ்டேஜ் என இந்த ஏவுகணைகள் மூன்று கட்டங்களை கொண்டிருக்கிறது. பூஸ்ட் ஸ்டேஜில், ராக்கெட் என்ஜின்களைப் பயன்படுத்தி ஏவுகணை விண்ணில் ஏவப்படுகிறது. இது சில நிமிடங்களில் விண்வெளியின் விளிம்பை அடைகிறது. இந்த கட்டத்தில் ஏவுகணை வழிநடத்தப்படுகிறது.
மிட்கோர்ஸ் ஸ்டேஜில், என்ஜின்கள் அணைந்த பிறகு, ஏவுகணை விண்வெளியில் செல்கிறது. இது வளைந்த பாதையில் பயணிக்கிறது. MIRVகள் பொருத்தப்பட்டிருந்தால், பல வெடிகுண்டுகள் இங்கே வெளியிடப்படுகின்றன. ICBMகளுக்கு இந்த கட்டம் 20 நிமிடங்கள் வரை நீடிக்கும்.
டெர்மினல் ஸ்டேஜில் வெடிகுண்டு வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழைகிறது. புவியீர்ப்பு விசை அவற்றை அதிக வேகத்தில் கீழே இழுக்கிறது. ஏவுகணைக்கு ஆற்றல் இல்லை. இது அதன் வேகத்தால் வழி நடத்தப்படுகிறது. இந்த கட்டம் ஒரு நிமிடத்திற்கும் குறைவாகவே எடுக்கும். இப்படித்தான் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications