விக்டர் யானுகோவிச்! போரில் ரஷ்யா வென்றால் உக்ரைன் புதிய அதிபர் இவர் தான்..புதின் போடும் மெகா பிளான்
கீவ்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் சூழலில், அங்கு ரஷ்ய ஆதரவு பெற்ற அரசு அமையும் பட்சத்தில் யார் அதிபராக நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
உக்ரைன் நாட்டில் கடந்த வாரம் தொடங்கிய போர் 10ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது. உக்ரைன் நாட்டில் பல முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது.
ரஷ்யா போரை ஆரம்பித்தால் உலக நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கும் என்றே பலரும் முதலில் கருதினர், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூட, உலக நாடுகள் தங்களுக்கு உதவும் என்றே பெரிதும் நம்பி இருந்தார்.

ஒதுங்கிய உலக நாடுகள்
ஆனால், அனைத்து நாடுகளும் பொருளாதாரத் தடைகளை அறிவிப்பதுடன் நிறுத்திக் கொண்டன. எந்தவொரு நாடும் உக்ரைனுக்கு ஆதரவாகக் களமிறங்கவில்லை. இது உக்ரைன் மக்களுக்கு மட்டுமின்றி, அதிபர் ஜெலன்ஸ்கிக்கும் கடும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. இந்த ஏமாற்றம் அவரது பேச்சுகளிலும் வெளிப்பட்டே வருகிறது. உலக நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிட மறுப்பதால், இன்னும் சில வாரங்களில் உக்ரைனை ஒட்டுமொத்தமாக ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடும் எனக் கூறப்படுகிறது. அந்த சமயத்தில் ரஷ்யா ஆதரவுடன் அமையும் அரசில் அதிபராக யார் இருக்கலாம் என்பது குறித்த தகவல்களும் இப்போது வெளியாகி உள்ளது.

அடுத்து இவர் தான்
தற்போதைய ஆட்சி கவிழ்ந்தால், உக்ரைனின் முன்னாள் அதிபர் விக்டர் யானுகோவிச் தான் அதிபர் பதவிக்கு ரஷ்யாவின் சாய்ஸாக உள்ளார். 71 வயதான இந்த விக்டர் யானுகோவிச் ஏற்கனவே கடந்த காலங்களில் உக்ரைன் பிரதமராகவும் அதிபராகவும் இருந்தவர். இந்த பதவிகளில் இருந்து இரண்டு முறை நீக்கப்பட்டவர் என்ற போதிலும், இவரை அதிபராக்கவே ரஷ்யா விரும்புவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விக்டர் யானுகோவிச்சை ஒரு சிறப்புச் சந்தர்ப்பத்திற்காக ரஷ்யா தயார்ப்படுத்துவதாக அந்நாட்டின் ஆன்லைன் செய்தி நிறுவனம் உக்ரைன்ஸ்கா பிராவ்தா செய்தி வெளியிட்டுள்ளது.

விக்டர் யானுகோவிச்
கடந்த 1950இல் அப்போது ஒருங்கிணைந்த சோவியத் ஒன்றியத்தின் யெனாகியேவோ என்ற நகரில் பிறந்தவர் விக்டர் யானுகோவிச். குற்றச் சம்பவங்களுக்காக விக்டர் யானுகோவிச் இளமைப் பருவத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இருப்பினும், அவரது அந்த குற்றச்சாட்டுகள் இறுதியில் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இவர் கிழக்கு உக்ரைனில் சோவியத் யூனியனின் நிலக்கரி சுரங்கத் துறையில் ஒரு போக்குவரத்து நிர்வாகியாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கியனார்.

அரசியல் வளர்ச்சி
1995இல் உள்ளாட்சி பிரதிநிதியானார் இவர், அதன் பின்னர் ஒரே ஆண்டில் 30 லட்சம் மக்கள் வசிக்கும் டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர், 2002இல் அப்போது அதிபராக இருந்த லியோனிட் குச்மா, விக்டரை பிரதமராக நியமித்தார். அதைத் தொடர்ந்து 2004இல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் விக்டர் வென்றதாக முதலில் அறிவிக்கப்பட்டார். இருப்பினும், அதிபர் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாகச் சாடி, மாபெரும் மக்கள் போராட்டம் நடைபெற்றது. இது ஆரஞ்சு புரட்சி என்று அழைக்கப்படுகிறது.

அதிபர்
அதன் பின்னர் சில ஆண்டுகள் அமைதியாக இருந்த விக்டர் 2006 முதல் 2007 வரை இரண்டாவது முறையாகப் பிரதமராக பணியாற்றினார். அந்த சமயத்தில் அவரது செயல்பாடுகள் மக்களைப் பெருவாரியாகக் கவரவே மிகவும் பிரபலமான ஒரு அரசியல்வாதி ஆனார். இதையடுத்து 2010இல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வென்று, உக்ரைன் அதிபராக முதல்முறையாகப் பொறுப்பேற்றார். விக்டர் அதிபராக இருந்த சமயத்தில் தான் உக்ரைன்- ஐரோப்பிய ஒன்றியம் இடையே நெருக்கமான உறவு ஏற்பட்டது.

திடீர் மாற்றம்
கடந்த 2013 நவ. மாதம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் முக்கிய ஒப்பந்தத்தைக் கையெழுத்திடத் தாயாரானர் விக்டர். இருப்பினும், அதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஒப்பந்தத்தை திடீரென விக்டர் ரத்து செய்தார். இதைக் கண்டித்து மாபெரும் மக்கள் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் திடீரென வன்முறை ஏற்பட 48 மணி நேரத்தில் சுமார் 88 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர், அதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் கொடுத்த அழுத்தத்தால், அதிபருக்கான அதிகாரங்கள் நாடாளுமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அவரும் தலைநகரில் இருந்து தப்பினார்.

புதின் சாய்ஸ்
கடந்த 2004ஆம் ஆண்டிலேயே ரஷ்ய அதிபர் புதினை வெளிப்படையாக ஆதரித்தவர் விக்டர் யானுகோவிச். அதன் பின்னர், தனது இமேஜை மாற்றிக் கொள்ளக் கடுமையாக முயன்ற அவர், ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கம் காட்டினார். மேலும், அதிபர் பதவியில் இருந்து விலகிய உடன் விக்டர் யானுகோவிச் ரஷ்யாவுக்குத் தான் தஞ்சம் தேடிப் புகுந்தார். இப்படி கடந்த காலத்தில் ரஷ்யா உடன் இணக்கமான உறவை கொண்டிருந்தவர் என்பதால், கடைசி வரை தனக்கு ஆதரவாகவே விக்டர் இருப்பார் என கருதுகிறார் புதின் இதன் காரணமாகவே உக்ரைனில் ரஷ்யா ஆதரவு பெற்ற அரசு அமையும் போது, விக்டர் யானுகோவிச் தான் புதினின் முதல் சாய்ஸாக இருப்பார் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications