ரஷ்ய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம்: 'முதுகில் குத்திவிட்டார்கள்' புதின் ஆவேசம் !
அங்காரா: சிரிய நாட்டின் எல்லையில் பறந்த ரஷ்ய நாட்டின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய செயலை முதுகில் குத்திவிட்டார்கள் என்று தான் கூற வேண்டும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கோபமாக தெரிவித்துள்ளார்.
சிரிய நாட்டின் எல்லை அருகே பறந்த ஜெட் போர் விமானத்தை, தருக்கியைச் சேர்ந்த இரு எப்-16 ரக போர் விமானங்கள் வானிலேயே இன்று காலை சுட்டு வீழ்த்தின. ஐந்து நிமிஷ இடைவெளியில் 10 முறை ரஷ்ய போர் விமானம் அத்துமீறி துருக்கி எல்லையில் பறந்ததாக, துருக்கி அதிகாரிகள் கூறினர். ஆனால், அத்துமீறி துருக்கி எல்லைக்குள் பறக்கவில்லை என ரஷ்ய அதிகாரிகள் இதை மறுத்துள்ளன.
சிரியாவிலிருந்து வந்து கொண்டிருந்த ரஷ்ய போர் விமானத்தை துருக்கி நாட்டைச் சேர்ந்த போர் விமானங்கள், துருக்கி-சிரியா எல்லைப்பகுதிக்கருகே, இன்று காலை சுட்டு வீழ்த்தியது. எச்சரிக்கை விடுத்ததையும் மீறி, துருக்கி வான்வெளிக்குள் நுழைய முயன்றதால் போர்விதிகளுக்குட்பட்டு அதனை சுட்டு வீழ்த்தியதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனர். தங்கள் நாட்டு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகமும் உறுதி செய்தது.
இந்நிலையில், ரஷ்ய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது பற்றி கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் தீவிரவாதிகளை மட்டுமே எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்த செயலை 'முதுகில் குத்திவிட்டார்கள்' என்று தான் கூறவேண்டும். இதை வேறு மாதிரி சொல்லமுடியாது.
இன்று நடைபெற்ற சம்பவம் துருக்கி - ரஷ்ய இடையேயான உறவில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த சம்பவம் பற்றி கவனத்துடன் ஆராயப்படும். ஆனால், இதுபோன்ற குற்றங்களை பொறுத்துக்கொள்ள முடியாது.
மேலும் ரஷ்ய போர் விமானம் சிரியாவின் எல்லைக்குள்ளாகத்தான் சுட்டு வீழ்த்தப்பட்டது. எங்கள் விமானிகள் துருக்கிக்கு எதிராக எந்த செயல்களிலும் ஈடுப்படவில்லை" என்று புதின் தெரிவித்துள்ளார்.