சாதாரண மக்களின் அசாதாரணத் தலைவி ஜெயலலிதா!- வாஷிங்டன் கூட்டத்தில் புகழஞ்சலி
வாஷிங்டன்: சாதாரண மக்களின் அசாதாரணத் தலைவியாகத் திகழ்ந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா என வாஷிங்டன் தமிழ்ச் சங்க இரங்கல் கூட்டத்தில் புகழஞ்சலி செலுத்தினர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாஷிங்டன் தமிழ்ச் சங்கம் சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்ச் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் வாஷிங்டன் மாநகர தமிழ்ப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

முதலில் அனைவரும் ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர், வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பார்த்தசாரதி சம்மந்தம், முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பல சாதனைகளைப் பற்றிக் கூறினார். கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.
அடுத்துப் பேசிய மேரிலாந்து மாநில வெளியுறவுத்துறை இணைச் செயலராகப் பணிபுரிந்து தற்போது அம்மாநிலத்தின் போக்குவரத்து ஆணையராகப் பணியாற்றும் டாக்டர் ராஜன் நடராஜன், 'சாதாரண மக்களின் அசாதாரணத் தலைவி ஜெயலலிதா' என்று புகழாரம் சூட்டினார். மேலும், "ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய ஜெயலலிதா, மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு தொலைநோக்குப் பார்வையுடன் பல அரிய செயல் திட்டங்களைத் தீட்டினார். இரும்புப் பெண்மணியாக, பெண்களுக்கு மட்டுமல்லாமல், ஆண்களுக்கும் ஒரு முன் மாதிரியாகத் திகழ்ந்தார். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன்," என்று கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய பெட்னா தலைவர் நாஞ்சில் பீட்டர், "ஏழைகளின் வாழ்க்கைத் தரம் வெகுவாக உயரக் காரணமானவர், ஜெயலலிதா. ஆடுவளர்ப்புத் திட்டம் போன்ற ஏழைகளுக்கு உதவும் அரிய திட்டங்களைச் செயல் படுத்தியது மட்டுமன்றி, நடுவண் அரசின் நிர்ப்பந்தங்களுக்குப் பணியாமல், துணிச்சலோடு நிர்வாகம் செய்தார்," என்று கூறினார்.
தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் கோபிநாத், "ஜெயலலிதாவின் புகழ் என்றும் மங்காது. வரும் காலங்களிலும் தமிழகம் தழைத்தோங்க அரசாட்சி செய்பவர்களுக்கு உறுதுணையாக அவர் இருப்பார்," என்று தெரிவித்தார்.

தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் ஜான் பெனடிக்ட், "ஜெயலலிதா ஒரு இரும்புப் பெண்மணி மட்டுமல்ல; அவர் ஒரு எஃகுக் கோட்டை," என்று அஞ்சலி செலுத்தினார்.
உலகத் தமிழ்ப் பேரவைத் தலைவர் இரவி, ஜெயலலிதா இலங்கைத் தமிழருக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றியது ஒரு மிகப் பெரிய தூண் போன்றதொரு ஆதரவு என்றார். சங்க நிர்வாகி ராஜாராம் ஜெயலலிதாவை நேரில் சந்தித்த தருணத்தினை நினைவு கூர்ந்து, அவரது இயல்பான குணத்தினைப் புகழ்ந்தார். வாழ்வியல் போகம் வல்லுநர் மற்றும் சித்த மருத்துவ சபைத் தலைவர் யோகி ராஜாபாபு ஜெயலலிதாவின் எண்ணங்கள் வருங்காலத்தில் வழி நடத்தும் என்று முடித்தார்.
- கோபிநாத்












Click it and Unblock the Notifications