தற்கொலைப்படை தாக்குதல் நடத்தும் முன்பு கதறி அழுத தீவிரவாதி: வீடியோ இதோ
ராக்கா: சிரியாவில் உள்ள ஃபுவா நகரில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தும் முன்பு இளம் தீவிரவாதி ஒருவர் கதறி அழுத வீடியோ வெளியாகியுள்ளது.
உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்தவர் ஜாபர் அல் தய்யார். அவர் சிரியாவில் அரசை எதிர்த்து அல் கொய்தாவுடன் சேர்ந்து போராடும் இமாம் புகாரி ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர். அவர் சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் உள்ள ஃபுவா நகரில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த தீவிரவாதிகளால் தேர்வு செய்யப்பட்டார்.
அவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தும் முன்பு கதறி அழுத வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவின் விபரம் வருமாறு,
சக தீவிரவாதிகள் அவரை கட்டித்தழுவி வாழ்த்தி வெடிகுண்டுகள் நிறைந்த வாகனத்தில் ஏற்றிவிட்டனர். வாகனத்தில் ஏறியதும் அவர் கதறி அழத் துவங்கினார். இதை பார்த்த பிற தீவிரவாதிகள் அவரை தேற்றினர்.
ஜாபர், என் சகோதரரே பயப்படாதீர்கள். பயந்தால் அல்லாஹ்வை நினைத்துக் கொள்ளுங்கள் என்று ஒரு தீவிரவாதி தெரிவித்தார். அதற்கு ஜாபரோ, எனக்கு பயமாக உள்ளது. நான் என் முயற்சியில் வெற்றி பெறுவேன் என நினைக்கவில்லை என்றார்.
பின்னர் ஒரு வழியாக அங்கிருந்து கிளம்பிய அவர் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியதில் அந்த பகுதியே அதிர்ந்தது. ஆனால் இந்த தாக்குதலில் எத்தனை பேர் பலியானார்கள் என்ற விபரம் தெரியவில்லை.
ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட அமைப்புகள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களையே பெரும்பாலும் தற்கொலைப்படை தாக்குதலுக்கு பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.