காஷ்மீரிலுள்ள முஸ்லீம்களுக்காக குரல் எழுப்ப எங்களுக்கு உரிமை உள்ளது: தாலிபான் அறிவிப்பு
காபூல்: ஜம்மு காஷ்மீரில் உள்ள முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க தங்களுக்கு உரிமை உண்டு என்று தாலிபன் தீவிரவாத இயக்கத்தின் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
"பிபிசி உருது", ஊடகத்திற்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் சுஹைல் ஷாஹீன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கத்தார் நாட்டின் தோஹாவில் அமெரிக்காவுடன் தாலிபன்கள் செய்து கொண்ட உடன்படிக்கைப்படி, ஆப்கானிஸ்தான் மண்ணை வேறு எந்த நாட்டுக்கு எதிரான ஆயுத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் எந்த கொள்கையும் தங்களுக்கு இல்லை என்று தாலிபான்கள் உறுதியளித்ததையும் இந்த பேட்டியில் அவர் நினைவு கூர்ந்தார்.

காஷ்மீர் முஸ்லீம்களுக்காக குரல்
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், நாங்கள் முஸ்லிம்களாக, இருப்பதால், காஷ்மீரிலோ இந்தியாவிலோ அல்லது வேறு எந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கும், குரல் கொடுக்க எங்களுக்கு உரிமை உண்டு. முஸ்லிம்கள் உங்களுடைய சொந்த மக்கள், உங்களுடைய குடிமக்கள், உங்களுடைய சட்டத்தின்கீழ் அவர்கள் சமமானவர்கள் என்று எங்களுடைய குரலை உரக்க சொல்லுவோம். ஆனால் பிற நாடுகளுக்கு எதிரான ஆயுத போராட்டங்ளுக்கு ஆப்கன் மண்ணில் இடம் கொடுக்க மாட்டோம்.

சர்ச்சைகள்
இந்தியாவில் 2014ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அரசு அமைந்த பிறகு, முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், கும்பல் வன்முறைகள் நடப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இது தவிர,இந்தியாவை சுற்றியுள்ள மூன்று அண்டை நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் அல்லாத சட்டவிரோத குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்தை மோடி அரசு கொண்டு வந்தது. இதுவும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஜம்மு காஷ்மீருக்கு இருந்து வந்த சிறப்பு அதிகாரத்தைமோடி அரசு திரும்ப பெற்றது. 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றியது. இதனால் காஷ்மீர்வாசிகளில் ஒரு பிரிவினர் அதிருப்தியிலுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. காஷ்மீரில் முஸ்லீம்கள் கொடுமைப்படுத்தப்படுவதாக பாகிஸ்தான் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. காஷ்மீர் தங்களுக்கு சொந்தம் என்பது அவர்கள் வாதம். அதேநேரம், யூனியன் பிரதேசமாக்கப்பட்ட பிறகு நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக கணிசமான தொகுதிகளில் வென்றது. எனவே காஷ்மீரில் மோடி அரசுக்கு எதிராக அதிருப்தியில்லை என பாஜக கூறியது. இருப்பினும் ஒரு பிரிவினர் அதிருப்தியில் இருப்பதால் அவர்களை குறி வைத்து, தாலிபான்கள், பாகிஸ்தானோடு இணைந்து காய் நகர்த்தக் கூடும் என்று எச்சரிக்கை தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பாகிஸ்தான் திட்டம்
சமீபத்தில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பாகிஸ்தானில் ஆளும் பிடிஐ கட்சித் தலைவர் நீலம் இர்ஷாத் ஷேக், காஷ்மீர் விடுதலைக்காக எங்களுக்கு உதவுவதாகவும் இந்த விஷயத்தில் நாங்களுடன் உங்களுடன்தான் என்றும் தாலிபன்கள் கூறியுள்ளனர் என்றும் பேசியுள்ளார். இந்த பேச்சு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2001ஆம் ஆண்டில் தாலிபான்களை அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் வெளியேற்றும் முன்பாக, அந்த நாட்டில் தாலிபனுக்கு எதிரான வடக்கு கூட்டணி குழுவை இந்தியா ஆதரித்து வந்தது. பிறகு அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகளுடன் இணைந்து ஜனநாயக அரசுக்கு உதவிகரமாக இருந்தது. கட்டமைப்பு வசதிகளுக்கு உதவி செய்தது இந்தியா. இந்த நிலையில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தாலிபான்கள், 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் எழுச்சி பெற்றிருப்பது இந்தியாவுக்கு தலைவலியாக கருதப்படுகிறது.

அறிக்கையில் வார்னிங்
தாலிபான்களுடன் அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் வெளிப்படையாகவே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஆனால், இந்தியாவால் அவ்வாறு நேரடியாக செய்ய முடியவில்லை. தாலிபன் கட்டமைப்பில் ஹக்கானி குழு என அழைத்துக் கொள்ளும் ஆயுதக்குழுதான் ஆயுதங்களை நவீன முறையில் கையாளும் பயிற்சி பெற்றது. காபூலில் உள்ள இந்திய தூதரகம் உள்பட இந்திய சொத்துகள் பலவற்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு மூளையாகவும் தாக்குதல்களை செயல்படுத்திய குழு இதுதான் என்று, டெல்லியில் இருந்து செயல்படும் பன்னாட்டு சர்வதேச உறவுகள் தொடர்பான ஆய்வு அமைப்பான "கர்னெஜி இந்தியா" அறிக்கை தெரிவிக்கிறது. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மற்றும் ஹக்கானி தலைமைக்கு இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளது. எனவே, ஐஎஸ்ஐயுடன் சேர்ந்து கொண்டு இந்திய எதிர்ப்பு கொள்கையை ஹக்கானி குழு தொடர அதிக வாய்ப்புள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மறுப்பு
இது குறித்து தாலிபன் செய்தித்தொடர்பாளர் ஷாஹீனிடம் பிபிசி கேட்டபோது, ஹக்கானிக்களுக்கு எதிரான இதுபோன்ற கருத்துகள் எல்லாம் வெறும் ஊகங்களே என்று பதிலளித்தார். ஹக்கானிகள் ஒரு குழு கிடையாது. அவர்கள் இஸ்லாமிய ஆப்கானிஸ்தான் எமிரேட்டின் அங்கம். அவர்கள்தான் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட் என்றார் அவர்.

கந்தகார் விமான கடத்தல்
20 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் இருந்து காட்மாண்டுவுக்கு 180 பேருடன் சென்ற இந்திய விமானம் கடத்தப்பட்டதில் தாலிபனின் பங்கு இருந்தது. அப்போது அந்த விமானம் ஆப்கானிஸ்தானின் கந்தஹாருக்கு கடத்தப்பட்டது. அதில் இருந்த பயணிகளை தாலிபன்கள் பணய கைதிகளாக வைத்துக் கொண்டதால் இந்திய சிறைகளில் உள்ள மூன்று தீவிரவாதிகளை விடுவித்து பயணிகள் மீட்கப்பட்டனர். ஆனால், இந்த தகவல்களை மறுக்கும் ஷாஹீன், இந்திய விமான கடத்தலில் தாலிபான்களுக்கு எந்த பங்கும் இல்லை என்றும் பயணிகளை மீட்க தாலிபன்கள் உதவியதாகவும் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தலைவலி
தாலிபான் எதிர்ப்பு பிரசாரத்தை இந்திய ஊடகங்கள் மிகைப்படுத்துவதாகவும் ஷாஹீன் குற்றம்சாட்டியுள்ளார். இவரது பேட்டி நம்பிக்கையளிப்பதாக இருந்தாலும், தாலிபான்கள் பேசுவது ஒன்று செய்வது மற்றொன்று என்ற வரலாறு கொண்டவர்கள் என்பதால், தாலிபான்களின் எழுச்சி, இந்தியாவிற்கு தலைவலிதான் என்கிறார்கள் சர்வதேச வெளிவிவகார நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications