7 மணிநேர போராட்டத்திற்கு பிறகு 2 சார்லி ஹெப்டோ தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை: பிணையாளி மீட்பு
பாரீஸ்: பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்திற்குள் புகுந்து 12 பேரை கொன்று குவித்து விட்டு தப்பிய குவாச்சி சகோதரர்கள் இருவரையும் பிரெஞ்சு ராணுவம் மற்றும் போலீஸ் படையினர் இன்று இரவு நடந்த தாக்குதலில் சுட்டுக் கொன்றனர்.
பாரீஸின் கிழக்கில் உள்ள தம்மார்டின் டி கோயல் நகரில் உள்ள ஒரு தொழிற்சாலைக்குள் இந்த இருவரும் தஞ்சமடைந்திருந்தனர். தங்களுடன் ஒரு பிணையாளியையும் அவர்கள் பிடித்து வைத்திருந்தனர்.

இதையடுத்து போலீஸ், ராணுவப்படையினர் அந்த இடத்தை முற்றுகையிட்டனர். அந்தப் பகுதியில் வசிப்போர் வீடுகளை விட்டு வெளியேற போலீஸார் தடை விதித்தனர். தீவிரவாதிகளை சரணடையுமாறு முதலில் கூறினர். ஆனால் அதற்கு அவர்கள் மறுத்து விட்டனர். அவர்களுடன் படையினர் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் தீவிரவாதிகள் இறங்கி வரவில்லை.
இந்த நிலையில் இன்று இரவு இந்திய நேரப்படி 10 மணிக்கு மேல் (பிரெஞ்சு நேரம் பிற்பகல் 2 மணி) படையினர் அதிரடியாக துப்பாக்கிச் சூட்டில் இறங்கினர். பதிலுக்கு தீவிரவாதிகளும் சரமாரியாக சுட்டனர். இந்த சண்டையின் இறுதியில் இரு சகோதரர்களையும் போலீஸார் - ராணுவம் அடங்கி படையினர் சுட்டுக் கொன்றனர்.
முன்னதாக பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ அலுவலகத்திற்குள் கடந்த புதன்கிழமை புகுந்த 2 பேர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பலியாகினர். இந்த வழக்கில் பிரான்ஸைச் சேர்ந்த சயித் குவாச்சி(34) மற்றும் செரிப் குவாச்சி(32) ஆகிய சகோதரர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் இன்று மான்டக்னி என்ற இடத்தில் ஒரு காரை கடத்தினர். பின்னர் தம்மார்டின் டி கோயல் என்ற ஊர் வழியாக செல்கையில் ஒருவரை இழுத்து காருக்குள் போட்டுச் சென்றனர். அவர்களின் காரை போலீசாரின் கார்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் துரத்தினர். அப்போது தீவிரவாதிகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் போலீசார் பதிலுக்கு சுட்டனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியாகினர், 20 பேர் காயம் அடைந்தனர்.

தீவிரவாதிகள் தம்மார்டின் டி கோயல் நகரில் உள்ள ஒரு தொழிற்சாலைக்குள் பிணையக் கைதியுடன் புகுந்துவிட்டனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
எதுவும் பலனளிக்காத நிலையில் இருவரையும் போலீஸார் சுட்டு வீழ்த்தினர்.












Click it and Unblock the Notifications