வேலை வாய்ப்பில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை.. முதல் உரையிலேயே அழுத்தமாக பதிவு செய்த அதிபர் ட்ரம்ப்
வாஷிங்டன்: வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்று அந்நாட்டின் அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் 45வது அதிபராக இன்று பதவியேற்றார். துணை அதிபராக மைக் பென்ஸ் பதவியேற்றுக்கொண்டார்.
பதவியேற்பு விழா வாஷிங்டனின் கேப்பிட்டல் ஹில் பகுதியில் நடைபெற்றது. அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ஜி ராபர்ட், ட்ரம்ப்புக்கு அதிபராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதன்பிறகு அதிபராக தனது முதல் உரையையாற்றினார் டொனால்ட் ட்ரம்ப். அப்போது எதிர்பார்த்தபடியே அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பது குறித்து பேசினார். அவரது தேர்தல் பிரசாரத்திலும் இதுதான் முக்கிய கருப்பொருளாக இருந்தது.
ட்ரம்ப் உரையிலிருந்து:
*இது மக்களின் வெற்றி. உங்களின் வலி எனது வலி, அரசின் வெற்றி உங்கள் வெற்றி.
*நமக்கு வருங்காலங்களில் சவால்கள் காத்திருக்கின்றன.
*கடினமான சூழலை தாண்டியும் நாம் வெற்றி பெறுவோம்
*'அமெரிக்கா முதலில்..' என்பதே எனது கோஷம்.
*வெளியுறவு, வேலைவாய்ப்பில் அமெரிக்கர்கள் நலனுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
*அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு பாதுகாக்கப்படும்.
*இரு ரூல்ஸ்களை பின்பற்ற உள்ளேன். அமெரிக்கர்களையே வாங்குவது, அமெரிக்கர்களையே வேலைக்கு அமர்த்துவது என்பதுதான் அந்த விதிமுறை.
*அமெரிக்க ஊழியர்களை கொண்டே, அமெரிக்கா மறுகட்டுமானம் செய்யப்படும்.
*இந்த நாள் முதல் அமெரிக்காவே எல்லாவற்றிலும் முதன்மைப்படுத்தப்படும்.
*எனது மூச்சுக்காற்று முழுக்க அமெரிக்கர் நலனே நிறைந்துள்ளது.
*அமெரிக்காவின் பழைய பெருமைகளை மீட்டெடுப்பேன்.
*அமெரிக்கர்களை வைத்து அமெரிக்காவை உயர்த்து என்பதே எனது கோஷம்.
*அமெரிக்கர்களின் வாழ்க்கை நடை முறையை பிறர் மீது சுமத்த மாட்டோம். ஆனால், அமெரிக்கர்களை பார்த்து பிறரை பின்பற்ற வைப்போம். இவ்வாறு ட்ரம்ப் தனது உரையில் குறிப்பிட்டார்.