தாலிபான்கள் மீது கை வைத்தால்.. ஏர்போர்ஸை அனுப்புவோம்.. ஆப்கானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த பாக்.!
இஸ்லாமாபாத்: ஆப்கான் படைகள் மீது விமானப்படை தாக்குதல் நடத்துவோம் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது. தாலிபான்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் படை ஆப்கானுக்கு இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது.
Recommended Video
ஆப்கானிஸ்தானை தாலிபான் படைகள் வேகமாக கைப்பற்றி வருகிறது. ஆப்கானிஸ்தானின் 90% பகுதிகளை தாலிபான் படைகள் கைப்பற்றிவிட்டன. நேற்று ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே இருக்கும் முக்கியமான எல்லை பகுதியை தாலிபான் படைகள் கைப்பற்றி உள்ளன.
இது தாலிபான் படைகளுக்கு மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்த பகுதி பாகிஸ்தானின் சமான் என்ற பகுதிக்கும், ஆப்கானிஸ்தானின் வெஷ் என்ற பகுதிக்கும் இடையில் இருக்கும் எல்லை ஆகும்.. இந்த எல்லை வழியாகவே பாகிஸ்தானுடன் ஆப்கானிஸ்தான் அரசு பொருளாதார ரீதியான வர்த்தகம் மேற்கொண்டது.

வெற்றி
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தானின் இந்த எல்லை பகுதியை தாலிபான் கைப்பற்றியது மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. தாலிபான்களுக்கு பாதுகாப்பு ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் இந்த எல்லை பகுதி பெரிய அளவில் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாலிபான்களுக்கு ஏற்கனவே பாகிஸ்தான் உதவுவதாக ஆப்கானிஸ்தான் ராணுவம் குற்றச்சாட்டு வைத்தது.

குற்றம்
பாகிஸ்தான் ராணுவம் தாலிபான்களுக்கு பயிற்சி அளிக்கிறது. தாலிபான்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி உதவி வருகிறது. பாகிஸ்தான் படைகளிடம் இருந்து கிட்டத்தட்ட 40 ஆயிரம் பேர் தாலிபான்களுடன் இணைந்து எங்களை தாக்கி வருகிறார்கள். ஆப்கானிஸ்தானில் தாலிபானின் வெற்றிக்கு பாகிஸ்தான் மிக தீவிரமாக முயன்று வருகிறது என்று ஆப்கானிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டியது.

விமானப்படை
இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் மீது இன்னொரு குற்றச்சாட்டையும் ஆப்கானிஸ்தான் வைத்துள்ளது. அதன்படி, தாலிபான்களை ஆப்கான் படைகள் தாக்க கூடாது என்று பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது. தாலிபான் மீது ஆப்கான் தாக்குதல் நடத்தினால் விமானப்படையை அனுப்பி எங்களின் படையை தாக்குவோம் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது என்று ஆப்கான் துணை அதிபர் சாலே தெரிவித்துள்ளார்.

துணை அதிபர்
மேலும், தாலிபான்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் விமானப்படை செயல்படும் என்று பாகிஸ்தான் அரசு எங்களிடம் எச்சரிக்கையுடன் தெரிவித்துள்ளது என்று ஆப்கான் துணை அதிபர் சாலே தெரிவித்துள்ளார். அதாவது தாலிபான்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் விமானப்படையை தயார் நிலையில் வைத்து இருப்பதாகவும், ஆப்கான் படைகள் சரண்டர் ஆகவில்லை என்றால் பாகிஸ்தான் விமானப்படையை அனுப்பி ஆப்கான் படையை தாக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆதாரம்
முக்கியமாக வெஷ் பகுதியை தாலிபான் படைகள் கைப்பற்றி உள்ளன. இந்த இடத்தை ஆப்கான் அரசு மீண்டும் கைப்பற்ற நினைத்தால் பாக் விமானப்படை தாலிபான்களுக்கு ஆதரவாக களமிறங்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாம். பாகிஸ்தான் எங்களை மிரட்டியதற்கான ஆதாரம் உள்ளது என்று ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

ஏவுகணைகள்
அதோடு பாகிஸ்தான் எல்லை பகுதியில் ஏவுகணைகளை குவித்து வைத்து இருக்கிறது. எங்களை மிரட்டும் வகையில் பாகிஸ்தான் இப்படி படைகளை குவித்து வைத்துள்ளது என்று ஆப்கானிஸ்தான் புகார் அளித்துள்ளது. இத்தனை நாட்கள் ஆப்கான் தாலிபான் மோதலில் பாகிஸ்தான் மறைமுகமாக தாலிபான்களுக்கு ஆதரவு அளித்து வந்தது.

ஆதரவு
ஆனால் தற்போது வெளிப்படையாக ஆதரவு அளிக்க தொடங்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக தாலிபான்களுக்கு ஆதரவாக பட்டவர்த்தனமாக பாகிஸ்தான் செயல்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கான் விவகாரத்தில் இந்தியா ஆப்கான் அரசுக்கும், அமைதியான ஆட்சிக்கும், பேச்சுவார்த்தை முன்னெடுப்புகளுக்கும் ஆதரவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications