ஈராக் கிளர்ச்சிக்கு பயந்து ஈரானுக்கு நேசக்கரம் நீட்டும் மேற்கத்திய நாடுகள்
தெஹ்ரான்: ஈராக்கில் நடைபெற்றுவரும் உள்நாட்டு யுத்தத்தால் கச்சா எண்ணை சப்ளையில் பாதிப்பு ஏற்படும் என்று அஞ்சும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இவ்வளவு நாளாக ஒதுக்கி வைத்திருந்த ஈரானை நோக்கி நேசக்கரம் நீட்டியபடி செல்ல தொடங்கியுள்ளன.
ஈராக்கில் சதாம் ஆதரவு சன்னி பிரிவு இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள், அரச படைகளை தாக்கி பல நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். இந்த விவகாரத்தில் தலையிட்டு, ராணுவ தாக்குதலை நடத்த முடியாது என்று கூறி அமெரிக்கா பின்வாங்கிவிட்டது.
எண்ணை தட்டுப்பாடு
நிலைமை இப்படியே நீடித்தால் எண்ணை வளம்மிக்க பகுதிகளும் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் வர வாய்ப்புள்ளது. அப்போது, கச்சா எண்ணை சப்ளையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
ஈரானுடன் ஒப்பந்தம்
கடந்த ஆண்டு நவம்பரில் ஈரான் நாட்டுடன், ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகள் ஐந்தும் கூடுதலாக ஜெர்மனியும் சேர்ந்து ஒரு ஒப்பந்தம் செய்தன. அதன்படி, தனது அணு ஆயுத தயாரிப்பு திட்டத்தை ஈரான் நிறுத்திக்கொண்டால், கச்சா எண்ணையை இறக்குமதி செய்து கொண்டு அதற்கு பதிலாக, ஆறு மாதங்களில் 4.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் 8 தவணைகளாக அளிக்கப்படும்.
அணு ஆயுத நிபந்தனை
இதன்படி ஈரான் இதுவரை 2.55 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஐந்து தவணைகளாக பெற்றுள்ளது. ஜூன் 17ம்தேதி, 550 மில்லியன் அமெரிக்க டாலர்களும், ஜூலை 20க்குள் மற்றொரு 550 மில்லியன் அமெரிக்க டாலர்களும் ஈரானுக்கு அளிக்கப்பட வேண்டும். ஆனால், அதற்கு முன்பாக, ஈரான் தனது வாக்குறுதிப்படி அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபடவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும். அதை நிரூபிக்காதவரை பாக்கி தொகை அளிக்கப்படமாட்டாது என்று மேற்கத்திய நாடுகள் நிலுவை தொகையை நிறுத்தி வைத்திருந்தன.
இந்தியாவுக்கு நெருக்கடி
இந்திய எண்ணை சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஈரானுக்கு அளிக்க வேண்ட்டிய 3.6 பில்லியன் அமெரிக்க டாலர் பணத்தில் 45 விழுக்காட்டை செலுத்திவிட்டன. இதனிடையே மே 17ம்தேதி, வியன்னாவில் ஐநா நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜெர்மனி இணைந்து ஈரானுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாத நிலையில், இந்தியா வைத்துள்ள 55 சதவீத பாக்கி தொகையை உடனடியாக செலுத்துமாறு ஈரான் வலியுறுத்த தொடங்கியுள்ளது. அதுமட்டுமின்றி பாக்கி வைத்துள்ள தொகைக்கு வட்டியையும் சேர்த்து கட்டுமாறு ஈரான் நிர்பந்திக்க தொடங்கியுள்ளது.
வட்டி தரமாட்டோம்
நிதி பரிமாற்றத்தில் ஈடுபடும் இந்திய ரிசர்வ் வங்கியோ, இந்தியா வட்டியை செலுத்தாது என்று கூறியுள்ளது. நிலுவை தொகையை செலுத்த இந்தியா 2013ம் ஆண்டு ஜனவரி முதலே, விரும்பிவருவதாகவும், ஆனால் இந்தியாவில் இருந்து நேரடியாக பணத்தை செலுத்த ஈரான் வசதியை ஏற்படுத்திதரவில்லை என்றும் ரிசர்வ் வங்கி குற்றம்சாட்டுகிறது.
பொருளாதார தடையால் தடங்கல்
ஈரானுடன் பண பரிவர்த்தனை செய்ய முடியாமல் போனதற்கு 2012ம் ஆண்டு ஈரான் மீது மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார தடைதான் காரணம் என்று கூறப்படுகிறது. அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக ஈரான் மீது குற்றம்சாட்டி இந்த தடையை மேற்கத்திய நாடுகள் விதித்தன. மேலும் தடையை நீக்கவும் மறுத்து வருகின்றன. ஆனால், ஈராக் தகராறு காரணமாக இப்போது திடீரென ஈரானை நோக்கி மேற்கத்திய நாடுகள் நேசக்கரம் நீள தொடங்கி உள்ளது.
நிபந்தனையற்ற ஆதரவு
அதேபோல, 6வது தவணையை ஈரானுக்கு அளிக்க நிபந்தனை ஏதுமின்றி திடீரென மேற்கத்திய நாடுகள் முன்வந்துள்ளன. இதற்கு ஈராக் மீதான அச்சம்தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஈரானுடன் நட்புறவை பேணி கச்சா எண்ணை சப்ளையில் தட்டுப்பாடு நிகழாமல் இருக்க மேற்கத்திய நாடுகள் விரும்புகின்றன.
இந்தியாவுக்கு சலுகை
இதனிடையே நிலுவை தொகை பணத்தை இந்தியா தங்களுக்கு தராவிட்டாலும் பரவாயில்லை என ஈரான் கூறியுள்ளது. ஈரான் தனது நாட்டுக்கு உணவு பொருட்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்களை பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. இந்த இறக்குமதி செலவை இந்தியா ஏற்றுக்கொள்ளுமாறு ஈரான் கேட்கிறது.