அழிவின் மையப்புள்ளியாக துருக்கி.. ஒரேயாண்டில் 33,000 முறை நிலநடுக்கம்.. பின்னணியில் ஷாக் காரணம்!
துருக்கி பிராந்தியத்தில் கடந்த 2020ல் மட்டும் 33 ஆயிரம் முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துருக்கி நாட்டின் நிலப்பரப்பில் 95 சதவீத பகுதிகள் நிலநடுக்க பாதிப்புடன் உள்ளது.
அங்காரா: துருக்கி, சிரியாவில் நேற்று ஒரேநாளில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல ஆயிரம் பேர் இறந்துள்ளனர். 1000க்கும் அதிகமான கட்டங்கள் தரைமட்டமாகி உள்ளன. இந்நிலையில் தான் 2020ல் மட்டும் துருக்கி பிராந்தியத்தில் 33 ஆயிரம் முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாவும், நிலநடுக்கத்தின் மையப்பகுதியாக துருக்கி மாறியுள்ள தகவலும் வெளியாகி உள்ளது. மேலும் துருக்கி அடிக்கடி சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்படுவதன் பின்னணியில் உள்ள முக்கிய அறிவியல் காரணம் வெளியாகி உள்ளது.
நேற்றைய தினம் ஒட்டுமொத்த உலகமும் உச்சரித்த வார்த்தை என்றால் துருக்கி, சிரியா தான். இங்கு அடுத்தடுத்து நேற்று நிகழ்ந்த நிலநடுக்கத்தால் ஒட்டுமொத்த உலகமும் இருநாடுகளுக்காக பிரார்த்தனை செய்ய தொடங்கி உள்ளன.
மேலும் ஒவ்வொரு நாடுகளும் துருக்கி, சிரியாவில் மீட்பு பணி மேற்கொள்ள உதவிகள் செய்து வருகின்றனர். துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியா நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள தொழில் நகரம் காசியான்டெப் ஏற்பட்ட நிலநடுக்கம் தான் பேரிழவை ஏற்படுத்தியது. இந்த நகரில் 20 லட்சம் மக்கள் வசித்து வரும் நிலையில் ஏரளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

3 முறை நிலநடுக்கம்
துருக்கி, சிரியாவின் எல்லையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இருநாடுகளுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று ஒரேநாளில் மட்டும் 3 முறை இந்த பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 5 மணிக்கு 7.8 ரிக்டரிலும், மாலையில் 2வதாக 7.5 ரிக்டரிலும், அதன்பிறகு 3வதாக ரிக்டரில் 6 என்ற அளவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்னள. மீட்பு பணிகள் நடந்த வேளையிலேயே அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் செய்வதறியாது திகைத்தனர். தற்போதைய சூழலில் நிலநடுக்கத்தால் துருக்கியில் 4 ஆயிரத்துக்கும் மேலானவர்கள் பலியாகி உள்ளனர். மேலும் கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல் சிரியாவில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

எத்தனை பேர் பலி?
துருக்கியை பொறுத்தமட்டில் இன்னும் பல ஆயிரம் பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தற்போது உலக நாடுகளின் உதவியுடன் சிறுவர்கள், குழந்தைகள் மீட்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உணவுகள், மாத்திரை, மருந்துகள் கிடைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தில் காசியான்டெப் மற்றும் கஹ்ராமன்மாராஸ் பகுதிகளில் ஏராளமான வீடுகள் தரைமட்டமான நிலையில் கடும் குளிரில் பொதுமக்கள் வெட்டவெளியில் வசிக்க தொடங்கி உள்ளனர். தற்போதைய சூழலில் சுமார் 1000க்கும் அதிகமான கட்டடங்கள் சேதமாகி உள்ளன. சிரியாவின் அலெப்போ மற்றும் ஹமா நகரங்களும் ஏராளமான கட்டடங்கள் உருக்குலைந்துள்ளன.

நிலநடுக்கத்தின் மையப்பகுதியாக..
இந்த நிலநடுக்கத்தால் சிரியாவை விட துருக்கி தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. காசியான்டெப் மற்றும் கஹ்ராமன்மாராஸ் உள்பட 10 முக்கிய நகரங்கள் சீர்குலைந்துள்ளன. ஹடே விமான நிலையத்தின் ஓடுபாதைகளும் கடுமையாக தேசமாகி உள்ளன. இந்நிலையில் தான் துருக்கி நிலநடுக்கத்தின் தாய் பகுதியாக அதாவது அடிக்கடி நிலநடுக்கத்தை எதிர்கொண்டு வருவதன் பின்னணியில் உள்ள அறிவியல் ரீதியான காரணம் பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒரே ஆண்டில் 33 ஆயிரம் நிலநடுக்கம்
உலகில் அடிக்கடி நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் நாடாக துருக்கி உள்ளது. ஏஎப்ஏடி எனும் பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையத்தின் ஆய்வின்படி கடந்த 2020ல் துருக்கி பிராந்தியத்தி்ல மட்டும் ஏறக்குறைய 33 ஆயிரம் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இதில் 332 நிலநடுக்கங்கள் மட்டுமே ரிக்டர் அளவுகோலில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்களே துருக்கி மற்றும் அதனையொட்டிய பிராந்தியம் எந்த அளவுக்கு நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது என்பதை மனதில் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

நிலநடுக்க பாதிப்புக்கு காரணம் என்ன?
துருக்கியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்பது அந்த பகுதி இருக்கும் நிலவியல் அமைப்பு தான் காரணம். அதாவது பூமியில் ஒவ்வொரு நாடுகளும் அமைந்திருக்கும் இடத்தை பொறுத்து அடுக்கு அல்லது பிளேட்டுகள் என வகைப்படுத்துகின்றனர். மொத்தம் 15 வகை அடுக்குகளாக இந்த பிளேட்டுகள் இருக்கும். இவை ஒன்றொடொன்று இறுக்கமாக அமைந்திருக்கும். இந்த பிளேட்டுகள் நகர்வு அல்லது அதிர்வு உருவானால் நிலநடுக்கம் ஏற்படும். யூரேசிய பிளேட், ஆப்பிரிக்கா மற்றும் அரேபியா பிளேட்டுகள் அனைத்தும் ஒரே இடத்தில் சந்திக்கும் பகுதியாக துருக்கி அனடோலியன் பிளேட்டில் அமைந்துள்ளது. இந்த அனடோலியன் பிளேட் என்பது யூரேசியா மற்றும் ஆப்பிரிக்கா மற்றும் அரேபியா பிளேட்டுக்கு இடையே அமைந்துள்ளது. இதுதான் உலகின் மிகவும் ஆபத்தான புள்ளியாக அறியப்படுகிறது. அதாவது இதில் ஏதேனும் ஒரு பிளேட் நகர்ந்தாலும் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது அனடோலியன் பிளேட் மீது அரேபியன் பிளேட் நகர்ந்துள்ளதால் தான் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் 3 வகையான பிளேட்டுகள் ஒரே இடத்தில் உள்ளதால் அடிக்கடி நகர்வுகள் ஏற்பட்டு துருக்கி அதிகமாக நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது.

95 சதவீத பகுதி பாதிப்பு
தற்போதைய சூழலில் துருக்கி நாட்டின் 95 சதவீத நிலப்பரப்பு நிலநடுக்க பாதிப்புக்கு உள்ளாகும் எனவும், 3ல் ஒருவர் நிலநடுக்கத்தால் பாதிப்புக்கு உள்ளாகலாம் எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக துருக்கியின் துருக்கியை பொறுத்தமட்டில் இதற்கு முன்பு கடந்த 1999ல் கோல்குக் மற்றும் டூஸ் மாகாணங்களில் இரண்டு நிலநடுக்கங்களை ஏற்படுத்தியது. ரிக்டர் அளவுகோளில் 7.4 மற்றும் 7 என பதிவான நிலையில் மொத்தம் 18 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு 45,000 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அதன்பிறகு ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கமாக தற்போதைய நிலநடுக்கம் இருக்கும் என அஞ்சப்பபடுகிறது.












Click it and Unblock the Notifications