"முதல் முறையாக.." ராணுவத்திற்கு எதிராக பாகிஸ்தான் மக்கள்.. தேர்தல் ரிசல்ட் சொல்லும் பாடம் இதுதான்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் முழுமையாகத் தேர்தல் முடிவுகள் இன்னும் வரவில்லை என்றாலும் முதற்கட்ட முடிவுகளில் இம்ரான் கான் முன்னிலையில் இருப்பது போலத் தெரிகிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்துவது என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்
பாகிஸ்தானில் கடந்த பிப்.8ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது. இருப்பினும் 3 நாட்கள் ஆகியும் தேர்தல் முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்படவில்லை.

இப்போது வரை 124 தொகுதிகளில் முடிவுகள் வந்துள்ளது. அதில் இம்ரான் கான் கட்சி ஆதரவு பெற்ற சுயேச்சைகள் அதிகபட்சமாக 49 இடங்களில் வென்றது. நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 39 இடங்களிலும் பிலாவல் பூட்டோ பாகிஸ்தான் மக்கள் கட்சி சுமார் 30 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது.
ராணுவம்: இந்தத் தேர்தலில் இம்ரான் கானை ஒழிக்க அந்நாட்டு ராணுவம் அனைத்து நடவடிக்கைகளையும் செய்தன. பொதுவாகப் பாகிஸ்தானில் தேர்தலுக்குப் பிறகு தான் ராணுவம் தனது விளையாட்டை ஆரம்பிக்கும். ஆனால், இந்த முறை தேர்தலுக்கு முன்பே அவர்கள் ஆரம்பித்தனர். இது ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாகுவதாக இருந்தது. இம்ரான் கானுக்கு எதிராக அத்தனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் அவர் வென்றுள்ளார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை அங்கு மொத்தம் 336 இடங்கள் உள்ளன, அதில் 266 இடங்கள் நேரடியாகத் தேர்தல் மூலம் நிரப்பப்படும். இதுபோக மற்ற 60 இடங்கள் பெண்கள் மற்றும் 10 சீட்கள் மத சிறுபான்மையினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது தேர்தலில் குறைந்தது 5% வாக்குகளைப் பெறும் கட்சிகள் பிரதிநிதித்துவ முறையில் இந்த 70 எம்பிக்களை நியமிப்பார்கள்.
"லண்டன் பிளான் படுதோல்வி!" இம்ரான் கான் பகீர்.. உச்சக்கட்ட குழப்பத்தில் பாகிஸ்தான்! என்ன நடக்கிறது
ஆனால், பதிவு செய்யப்பட்ட கட்சிகளையே இந்த இடங்களில் நியமிக்க முடியும். இம்ரான் கான் கட்சியினர் சுயேச்சையாக நின்றதால் அவர்களால் இந்த எம்பிகளை நிரப்ப முடியாது. அவரது கட்சியினர் எதற்காகச் சுயேச்சைகளாகக் களமிறங்கினர் என்ற கேள்வி வரும்.
இம்ரான் கான்: பாகிஸ்தான் பிரதமராக 2018 முதல் 2022 வரை இருந்தவர் இம்ரான் கான். பாக். பொறுத்தவரை அங்கே ராணுவம் வலிமையாக இருக்கும் நிலையில், அதைப் பகைத்துக் கொள்பவர்கள் பிரதமராக இருந்தாலும் ஓரங்கட்டப்படுவார்கள். இம்ரான் கானுக்கும் அதே தான் நடந்தது. அவரது கூட்டணி ஆட்சி 2022இல் கவிழ்க்கப்பட்டது. அதன் பிறகு அவர் மீது பல வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், ஜெயில் தண்டனையும் அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தானில் இவ்வளவு வேகமாக எல்லாம் எந்தவொரு வழக்கும் நடந்ததே இல்லை.
இது இம்ரான் கானை ஒழிக்க அந்நாட்டு ராணுவம் எவ்வளவு தீவிரமாக இருக்கிறது என்பதையே காட்டுகிறது. இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரது கட்சி சின்னமும் முடக்கப்பட்டது. இதன் காரணமாக அவரது வேட்பாளர்கள் சுயேச்சைகளாகக் களமிறங்கினர். இப்படி சுயேச்சையாகக் களமிறங்கியது அவருக்குப் பல பின்னடைவுகளைத் தரும். குறிப்பாக சுமார் 70 இடங்களை அவரது கட்சியால் பெற முடியாமல் போகும்.
சின்னம் கூட இல்லை: மேலும், பாகிஸ்தானைப் பொறுத்தவரை அங்கே கல்வியறிவு குறைவு.. வேட்பாளர்கள் பெயர்களைப் படித்துப் பார்த்து வாக்களிப்பது எல்லாம் குறைவு.. இதனால் தேர்தல் சமயங்களில் வேட்பாளரைக் காட்டிலும் சின்னம் ரொம்பவே முக்கியம்.. இந்தச் சூழலில் தான் இம்ரான் கான் கட்சி சின்னமும் முடக்கப்பட்டது. அதாவது இம்ரான் கானை காலி செய்ய எல்லா வேலைகளையும் செய்தார்கள். ஆனால், அனைத்தையும் தாண்டி அவர் வென்றுள்ளார்.
அதற்குக் காரணம் இன்னும் சுவாரசியமானது. அதாவது பாகிஸ்தானில் மொத்தம் 12.7 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 5.5 கோடி பேர் 43% பேர் 18 முதல் 35 வயது வரை கொண்ட இளைஞர்கள். முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவு இந்தத் தேர்தலில் முழுமையாக இம்ரான் கான் வசம் வந்துள்ளது. இதுவே கட்சி, சின்னம், அவ்வளவு ஏன் இம்ரான் கானே சிறையில் இருந்தாலும் அவரது கட்சிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது.
உணர்த்துவது என்ன: இது பாகிஸ்தான் மக்களின் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் காட்டுகிறது. இத்தனை காலம் நேரடியாகவோ மறமுமாகவோ ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த மக்கள் இம்ரான் கான் பக்கம் சாய்ந்துள்ளனர். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்கள் மனநிலை இதுவாகவே இருந்துள்ளது.
இது இம்ரான் கானுக்கான ஆதரவு என்பதை விட அந்நாட்டு ராணுவத்திற்கு எதிராக மக்கள் திரும்பியுள்ளார்கள் என்று சொல்வதே சரியாக இருக்கும். தேர்தல் முடிவுகளும் கூட அதையே தான் காட்டுகிறது. இது பாகிஸ்தான் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.












Click it and Unblock the Notifications