பரபரக்கும் பாகிஸ்தான்! உச்சக்கட்ட அரசியல் குழப்பம்.. அடுத்து என்ன தான் நடக்கும்? புதிய பிரதமர் இவரா
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் ஆட்சியைத் தக்க வைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2019இல் புதிய பாகிஸ்தான் அமைப்போம் என்ற முழக்கத்தை முன் வைத்து ஆட்சியைப் பிடித்தவர் இம்ரான் கான். கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் பாகிஸ்தான் நாட்டில் இம்ரான் கான் ஆட்சி அமைத்தார்.
இருப்பினும், தேர்தல் காலத்தில் அளித்த பல்வேறு வாக்குறுதிகளை இம்ரான் கானால் நிறைவேற்ற முடியவில்லை. இதனால் கடந்த சில மாதங்களாகவே அங்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டது.

பாகிஸ்தான்
கடந்த மாதம் இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன. இம்ரான் கான் அரசில் இடம் பெற்றிருந்த கூட்டணிக் கட்சிகள் கூட அவருக்கு எதிராகத் திரும்பி இருந்ததால் அவரது ஆட்சி நிச்சயம் கவிழும் என்ற எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், கடந்த வாரம் கடைசி நேரத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறவில்லை. மேலும், பாகிஸ்தான் நாடாளுமன்றமும் கலைக்கப்பட்டது. இதை எதிர்த்து பாக். உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

2 முடிவுகள்
சபாநாயகர் உத்தரவைச் செல்லாது என அறிவித்த பாக். உயர் நீதிமன்றம், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. இப்போது அங்கு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றால் 2 முடிவுகள் கிடைக்கும். முதலில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்து. இம்ரான் கான் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.

உச்ச நீதிமன்றம்
அதேநேரம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறினால் இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படலாம். அப்படியென்றால் இம்ரான் கான் பதவியில் இருந்து நீக்கப்பட்டால், அடுத்து யார் பாகிஸ்தான் பிரதமராகப் பொறுப்பேற்பார். அந்நாட்டின் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, புதிய பாகிஸ்தான் பிரதமரை அந்நாட்டின் நாடாளுமன்றம் முடிவு செய்யும். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இதே நாடாளுமன்ற அமர்வில் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

புதிய பிரதமர்
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் இம்ரான் கான் தோல்வியடைந்தால், இந்த நாடாளுமன்றம் வரும் ஆகஸ்ட் 2023 வரை தொடர்ந்து செயல்பட முடியும். அதன் பிறகு 60 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்த வேண்டும். புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க பாக். நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும். சட்டசபையில் எந்த கட்சியும் வேட்பாளர்களை முன்னிறுத்தலாம். இருப்பினும் எதிர்க்கட்சிகள் அனைவரும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சகோதரர் ஷெபாஸ் ஷெரீபை முன்னிறுத்தவே முடிவு செய்துள்ளனர்.

தேர்தல்
புதிதாகப் பதவியேற்கும் பிரதமர் 2023 வரை கட்டாயம் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. புதிய பிரதமரால் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு உடனடியாக தேர்தலை அறிவிக்க முடியும். அதேநேரம் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், அந்நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படலாம். இப்படி பெரும் குழப்பங்கள் சூழ்ந்துள்ள பாகிஸ்தானில் அடுத்து என்ன தான் நடக்கப் போகிறது என்பது இன்னும் சில நாட்களில் தெளிவாகத் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications