இந்திய பெற்றோரிடம் இருந்து பறிக்கப்பட்ட கைக்குழந்தை.. ஜெர்மனியில் ஒரு பாச போராட்டம்! யார் இந்த அரிஹா
தங்கள் குழந்தைக்காக ஜெர்மனியில் போராடும் இந்தியத் தம்பதியின் கதைதான் இது.
பெர்லின்: இந்தியா தம்பதியின் குழந்தை அரிஹா, இப்போது ஜெர்மனி அதிகாரிகள் பராமரிப்பில் உள்ளது. சுமார் 1.5 ஆண்டுகளாகக் குழந்தையே அங்கேயே இருக்கும் நிலையில், குழந்தையை அவர்கள் இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து பலரும் பல்வேறு உலக நாடுகளுக்குச் சென்றுள்ளனர். பலரும் அந்தந்த நாடுகளில் செட்டிலாகிவிட்ட நிலையில், மற்றவர்கள் இன்னும் ஓர்க் விசாவில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
இப்படி வெவ்வேறு நாடுகளில் செட்டில் ஆவது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறது. இருந்த போதிலும், சில நேரங்களில் அந்நாட்டின் சட்டங்களை அவர்களுக்கு எதிராகப் போய்விடுகிறது

ஜெர்மனி
அப்படியொரு சம்பவம் தான் இப்போது ஜெர்மனியில் நடந்துள்ளது. அங்கு ஜெர்மனியில் இந்திய தம்பதியிடம் இருந்து அவர்களின் குழந்தை பிரிக்கப்பட்டுள்ளது. 14 மாதங்களாக அந்த குழந்தை அங்குள்ள காப்பகத்தில் தான் வளர்ந்து வருகிறது.. இந்திய தம்பதியிடம் அந்த குழந்தையை ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வரும் போதிலும், ஜெர்மனி அதிகாரிகள் தேவையில்லாமல் தாமதப்படுத்தி வருகின்றனர். இது நெட்டிசன்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட்
இந்தியாவைச் சேர்ந்த பாவேஷ் மற்றும் தாரா ஷா தம்பதி ஜெர்மனியில் வசித்து வருகின்றனர். இவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட இவர்களின் குழந்தையை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்றே இணையத்தில் நெட்டிசன்கள் பொங்கி எழுந்து வருகின்றனர். சமீபத்தில், திருமதி சாட்டர்ஜி Vs நார்வே என்ற பாலிவுட் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது. இது ஜெர்மனியில் பிரச்சினையைச் சந்தித்து வரும் பாவேஷ் மற்றும் தாரா ஷா ஜோடியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டதாகும்.

ஹேஷ்டேக்
இதே பிரச்சினை நார்வேயில் நடப்பது போல படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த டிரைலர் வெளியானதில் இருந்து நெட்டிசன்கள் பாவேஷ் தம்பதிக்கு ஆதரவாக ஜெர்மனியை புறக்கணிப்போம் போன்ற கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இதனால் BoyCott Germany ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது. அது சரி பாவேஷ் மற்றும் தாரா ஷாவுக்கு என்ன நடந்தது. அவர்கள் குழந்தைகளை ஜெர்மன் அதிகாரிகளிடம் சென்றது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

என்ன பிரச்சினை
குஜராத் அகமதாபாத்தைச் சேர்ந்த தம்பதி பவேஷ் மற்றும் தாரா ஷா. இவர்களின் 1.5 வயது மகள் அரிஹாவை ஜெர்மனியின் குழந்தை பாதுகாப்பு அதிகாரிகள் பெற்றோரிடம் இருந்து பிரித்து அழைத்துச் சென்றுவிட்டனர். பவேஷ் மற்றும் தாரா ஷா தம்பதிக்குக் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் தகுதி இல்லை என்று கூறி அழைத்துச் சென்றுவிட்டனர். மேலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தையை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டி, ஜெர்மன் அதிகாரிகள் அரிஹாவை தங்கள் பாதுகாப்பில் வைத்திருந்தனர்.

என்ன நடந்தது
அரிஹாவின் தந்தை பவேஷ் ஜாப் விசாவில் ஐரோப்பிய நாட்டில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து வந்தார். கடந்த செப்டம்பர் 2021இல் பாட்டி, அரிஹாவை கவனித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக குழந்தையைக் காயப்படுத்தியதாக பாவேஷ்- தாரா தெரிவித்தனர். இதனால் குழந்தையை அவர்கள் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இருப்பினும், அந்த தம்பதி குழந்தையை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறி, அந்நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் குழந்தையை தங்கள் பராமரிப்பில் வைத்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய நிலையில், கடந்தாண்டு பிப். மாதமே இது எந்தவொரு குற்றச்சாட்டுகள் இல்லாமல் க்ளோஸ் செய்யப்பட்டது.

தொடரும் சிக்கல்
போலீஸ் விசாரணை முடிந்து ஓராண்டு ஆகும் நிலையில், இன்னுமே இந்த தம்பதியிடம் அவர்கள் குழந்தையைத் தரவில்லை. இப்போது குழந்தைகள் மையத்தில் அந்த குழந்தை இருக்கும் நிலையில், மாதம் ஒரு முறை மட்டுமே பெற்றோரையே ஜெர்மனி அதிகாரிகள் பார்க்க அனுமதிக்கிறார்கள். அதையும் கூட வரும் காலத்தில் குறைக்க ஜெர்மனி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இது மட்டுமின்றி, குழந்தை மீது பெற்றோருக்கு எந்தவொரு உரிமையும் இல்லை என்பது குறித்தும் அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஓராண்டுக்கு மேலாகும் நிலையில், இன்னுமே இந்தச் சம்பவம் விசாரணைக்குக் கூட எடுத்துக் கொள்ளப்படவில்லை.

சட்ட பிரச்சினை
ஜெர்மனி சட்டப்படி 2 ஆண்டுகளுக்கு மேல் குழந்தை இதுபோன்ற மையத்தில் இருந்தால்.. மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைக்க மாட்டார்கள். அந்தச் சமயத்தில் பெற்றோர் மீது தவறு இல்லை என்று நிரூபித்தாலும் குழந்தையை ஒப்படைக்க முடியாது. குழந்தையால் திடீர் மாற்றங்களை பிராசஸ் செய்ய முடியாது என்பதாலேயே இந்தச் சட்டம். இதற்காகவே வழக்கை விசாரணைக்கு எடுக்காமல் அவர்கள் தாமதம் செய்வதாக ஷா தம்பதி குற்றஞ்சாட்டுகின்றனர். குழந்தையை மீட்க அவர்கள் எடுத்த போராட்டங்களும் பலன் தரவில்லை.

ஒரே நம்பிக்கை
கடந்தாண்டு டிசம்பர் மாதம் இந்தியா மற்றும் ஜெர்மன் வெளியுறவு அமைச்சர்கள் டெல்லியில் சந்தித்த நிலையில், அப்போதும் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், "குழந்தை இந்தியக் கலாச்சார மற்றும் சமூகச் சூழலில் வளர வேண்டியது அவரது உரிமை. இந்த விவகாரத்தில் தூதரகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார். இந்தியா வரும் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்திக்கிறார். இந்த சந்திப்பு தான் அரிஹாவின் பெற்றோருக்கு இப்போது இருக்கும் கடைசிக்கட்ட நம்பிக்கையின் ஒளியாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications