இஸ்ரேல் vs ஈரான்.. யாருக்கு ராணுவ பலம் அதிகம்? இரு நாடுகளிடம் உள்ள ஆயுதங்கள் எவ்வளவு? ஒப்பீடு
டெல் அவிவ்: இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால், மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம் நிலவும் நிலையில், இஸ்ரேல்- ஈரான் இடையேயான ராணுவ பலம், இரு நாடுகளிடமும் எத்தனை ஆயுதங்கள் உள்ளன என்ற விவரத்தை பார்க்கலாம்.
மத்திய கிழக்கில் உள்ள இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதற்கிடையே, பாலத்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் கடந்த ஆண்டு போர் தொடுத்தது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானில் ஆதிக்கம் செலுத்தும் ஹிஸ்புல்லா அமைப்பு, ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சி குழு ஆகியவை ஈரானின் ஆதரவுடன் இஸ்ரேலுடன் ஆயுத மோதலில் ஈடுபட்டுள்ளன.

ஈரான் கோபம்: ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஹிஸ்புல்லாவும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகிறது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல், லெபனான் மீது வான்வழி தாக்குதலை நடத்தி வந்தது. இதனால், மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம் நிலவி வரும் நிலையில், கடந்த ஜூலை மாதம் இறுதியில் ஈரான் அதிபரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக தெஹ்ரான் சென்றிருந்த ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் தனது உளவுப்படை மூலம் படுகொலை செய்தது. இது ஈரானுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
ஆனாலும் நேரடி தாக்குதலை ஈரான் நடத்தவில்லை. இந்த சூழலில்தான், ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது மிகப்பெரிய வான்வழி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் நஸ்ரல்லாவுடன் இருந்த ஈரானின் மூத்த ராணுவ தளபதி அப்பாஸ் என்பவரும் கொல்லப்பட்டார். ராணுவ தளபதியின் உயிரிழப்புக்கு இஸ்ரேலை பழிவாங்குவோம் என்று ஈரான் அரசு பகிரங்கமாக அறிவித்தது.
ஏவுகணை தாக்குதல்: இந்த நிலையில்தான் கடந்த 1 ஆம் தேதி இரவு இஸ்ரேல் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்கியது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் வீசப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. ஈரான் வீசிய ஏவுகணைகளில் பெரும்பாலானவற்றை அமெரிக்க ராணுவத்தின் உதவியுடன் நடுவானிலேயே இடைமறித்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
ஈரானின் இந்த நடவடிக்கையால் கடும் கோபம் அடைந்தது இஸ்ரேல் "ஈரான் மிகப்பெரிய தவறை செய்துவிட்டது. இதற்கான விலையை அந்த நாடு கொடுக்கும எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்தார். ஈரானுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என இஸ்ரேலும், பதில் தாக்குதல் நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என ஈரானும் பரஸ்பரம் மிரட்டல் விடுத்து இருக்கின்றன. இதனால், இரு நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் உள்ளது. இதனால், மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், இரு நாடுகளின் ராணுவ பலம் பற்றி இங்கே பார்க்கலாம்..
இஸ்ரேல் வசம் உள்ள ஆயுதங்கள்:
90.43 லட்சம் மக்கள் தொகை கொண்ட இஸ்ரேலில் ராணுவ வீரர்கள் எண்ணிக்கை மட்டும் 1.70 லட்சம் ஆகும். அந்த நாடு ராணுவத்திற்கு ரூ.84 ஆயிரம் கோடி நிதி ஒதுக்குகிறது. இஸ்ரேலிடம் உள்ள போர் விமானங்கள் எண்ணிக்கை 241 ஆகும். பீரங்கிகள் 1,996 உள்ளன. ராக்கெட் லாஞ்சர்கள் 150ம், போர்க்கப்பல்கள் 67, நீர்மூழ்கி கப்பல்கள் 5-ம் உள்ளன. ரோந்து கப்பல்கள் 45 உள்ளன.
ஈரான் வசம் உள்ள ஆயுதங்கள்:
ஈரானை எடுத்துக்கொண்டால் அந்த நாட்டின் மக்கள் தொகை 8.75 கோடியாகும். ராணுவ வீரர்கள் எண்ணிக்கை 6.10 லட்சம். ராணுவத்திற்கு ஒதுக்கும் தொகை 2.05 லட்சம் கோடி. 186 போர் விமானங்கள் உள்ளன. பீரங்கிகள் 1,370-ம், ராக்கெட் லாஞ்சர்கள் 775-ம், போர்க்கப்பல்கள் 101ம், நீர்மூழ்கி கப்பல்கள் 19-ம் உள்ளன. ரோந்து கப்பல்கள் 21 உள்ளன.
எண்ணிக்கைகள் அடிப்படையில் இஸ்ரேலை விட ஈரான் அதிக ஆயுதங்கள், ராணுவ வீரர்களை கொண்டிருந்தாலும் இஸ்ரேலிடம் அதி நவீன தொழில் நுட்பங்கள் உள்ளன. அது மட்டும் இன்றி அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆதரவு இஸ்ரேலுக்கு உள்ளது.












Click it and Unblock the Notifications