"ஆமாம்.. நான் ஒரு பிளேபாய் தான்.. " ஆபாச ஆடியோ லீக்! பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பரபர
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சில பெண்களுடன் பேசும் ஆடியோ என்று கூறி சில ஆடியோக்கள் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியிருந்தது. இதனிடையே இது தொடர்பாக அவரே சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளது.
கடந்த 2018 முதல் 2022 வரை பாகிஸ்தான் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். இருப்பினும், கடந்தாண்டு கூட்டணிக் கட்சிகளே அவருக்கு எதிராகத் திரும்பியதால் பெரும்பான்மையை இழக்கும் சூழலுக்கு அவர் தள்ளப்பட்டார். இதையடுத்து அவர் பதவி விலகினார்.
இப்போது அங்கு ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராக உள்ளார். இருப்பினும், இம்ரான் கான் அந்நாட்டு அரசுக்கு எதிராகத் தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தார். மேலும், வெளிநாட்டுச் சதி காரணமாகவே பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் இம்ரான் கான் தொடர்ந்து கூறி வந்தார்.

இம்ரான் கான்
அங்கு தற்போது அமைந்துள்ள பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்துவிட்டுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார். இதற்காக அங்கு நாடு முழுவதும் பயணித்தும் அவர் பிரசாரம் செய்து வந்தார். அப்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பஞ்சாப் மாகாணத்தில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த போது தான், யாரும் எதிர்பாராத விதமாக அவர் மீது துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதனால் அவருக்குக் காலில் ஏற்பட்ட நிலையில், அதில் இருந்து மெல்லக் குணமடைந்தார்.

பரபர ஆடியோ
இதற்கிடையே பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சில பெண்களுடன் பேசும் ஆடியோ என்று கூறி சில ஆடியோக்கள் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியிருந்தது. இது குறித்து அவரே இப்போது விளக்கமளித்துள்ளார். லாகூரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நான் பதவியில் இருந்து நீக்கப்படும் முன்பு, ஓய்வுபெற்ற ராணுவ தளபதி கமர் ஜாவேத் பஜ்வா ஒரு முறை சந்தித்தேன். அப்போது அவர் என்னை 'ப்ளே பாய்' என்று அழைத்திருந்தார். இதுபோன்ற ஆபாசமான ஆடியோ அல்லது வீடியோவை வெளியிட்டு நாம் இளைஞர்களுக்கு என்ன சொல்ல வருகிறோம்.

ஏமாற்றினார்
கடந்த ஆகஸ்ட் 2022ஆம் ஆண்டு ஜெனரல் பஜ்வாவை சந்தித்தேன். அப்போது எனது கட்சியை சேர்ந்த சிலரின் ஆடியோக்கள் மற்றும் வீடியோக்கள் தன்னிடம் இருப்பதாக அவர் கூறினார். மேலும், என்னை ஒரு 'ப்ளேபாய்' என்றும் அவர் கூறினார். நான் அவரிடம் சொன்னேன்... ஆம், நான் ஒரு பிளேபாய் தான். ஆனால், அது கடந்த காலத்தில்.. அப்போது நான் ரொம்ப நல்லவனாக ஏஞ்சலை போல இருந்துள்ளேன் என்று நான் ஒருபோதும் கூறவில்லை. நான் பதவியில் இருந்து நீக்கப்பட பஜ்வாவும் ஒரு முக்கிய காரணம். அவர் திட்டமிட்டு என்னை ஏமாற்றிவிட்டார்.

ஆம். .பிளேபாய் தான்
அவர் டபுள் கேம் ஆடிவிட்டார். என்னிடம் அவர் நல்லவன் போலவே நடித்தார். ஆனால், மறுபுறம் ஷெபாஸ் ஷெரீப்பை பிரதமராக்கும் நடவடிக்கையில் இறங்கினார். அவர் கவனமாக டபுள் கேம் விளையாடுகிறார் என்பதை நான் அறிந்து கொண்டேன்... பஜ்வா என் முதுகில் குத்தினார். இப்போது பாகிஸ்தானில் தேர்தல் நடத்தப்பட்டால் நான் வென்று பிரதமராவது உறுதி. இதை அனைவருக்கும் தெரியும். இதைத் தடுக்கவே ராணுவத்தில் பாஜ்வா ஒரு 'செட்-அப்பை' செய்துள்ளார். அவர்கள் இன்னுமே கூட நான் பிரதமராகக் கூடாது என்பதில் தீவிரமாக இயங்கி வருகிறார்கள்.

நான் செய்த தவறு
நான் எனது பதவிக் காலத்தில் பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளேன். ஆனால், ஓய்வு பெற இருந்த ஜெனரல் பாஜ்வாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கியதுதான் நான் செய்த மிகப் பெரிய தவறு. பதவி நீட்டிப்புக்குப் பிறகு அவர் தனது உண்மை நிறத்தைக் காட்டத் தொடங்கினார். அரசுக்கு எதிராகச் சதி செய்த அவர், என்னையும் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப் பல நடவடிக்கைகளை எடுத்தார். நான் அவருக்குப் பதவி நீட்டிப்பு கொடுத்தது தான் எனது வாழ்க்கையில் செய்த மிகப் பெரிய தவறு" என்று அவர் தெரிவித்தார்.

ஆடியோ சர்ச்சை
இம்ரான் கான் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் வலியுறுத்தி பிரசாரம் செய்து வருகிறார். அவருக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.. இந்தச் சூழலில் தான் அவர் பெண்களுடன் பேசுவதைப் போன்ற மூன்று ஆடியோ வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியது. அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா, இந்த ஆடியோ கிளிப்புகள் உண்மையானவை என்றும் விரைவில் கானின் வீடியோ கிளிப்புகள் வெளியாகலாம் என்றும் கூறினார். இந்தச் சூழலில் இம்ரான் கானே தான் பிளே பாய் எனக் கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications