உலகை திரும்பி பார்க்க வைத்த தமிழர்! யூடியூப் CEO நீல் மோகன் டைம் இதழின் 2025 சிறந்த சிஇஓவாக தேர்வு!
சியாட்டில்: யூடியூப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நீல் மோகன் இருக்கிறார். அவருக்குத் தான் டைம் இதழின் 2025ஆம் ஆண்டிற்கான சிறந்த சிஇஓ என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. யார் இந்த நீல் மோகன்.. எதற்காக இந்த விருது இவருக்குத் தரப்பட்டது என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்த டிஜிட்டல் உலகத்தில் பொதுமக்கள் அதிகப்படியாகப் பயன்படுத்தும் தளங்களில் ஒன்று யூடியூப்.. உலகெங்கும் ஒவ்வொரு நாளும் பல கோடி பேர் யூடியூப் தளத்தைப் பயன்படுத்துகிறார்கள். பல லட்சம் பேர் யூடியூப் மூலமே வருமானம் ஈட்டி வருகிறார்கள். அந்த யூடியூப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நீல் மோகன் இருக்கிறார்.

சிறந்த சிஇஓ
அவருக்கு தான் டைம் இதழின் 2025ஆம் ஆண்டிற்கான சிறந்த சிஇஓ என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. பல கோடி மக்கள் பயன்படுத்தும் யூடியூப் தளத்தை மிக சிறப்பாக வழிநடத்தியதாகச் சொல்லிப் பாராட்டியுள்ள டைம் இதழ், நீல் மோகனுக்கு இந்த விருதை வழங்கியுள்ளது.
2023இல் தலைமைப் பொறுப்பை ஏற்ற நீல் மோகன், யூடியூப்பை முக்கியமான ஒரு மாற்றத்தை நோக்கி வழிநடத்தி வருகிறார். இதற்காகவே டைம் இதழ் அவரை விருதுக்குத் தேர்ந்தெடுத்துள்ளது. நீல் மோகனை பற்றி டைம் இதழில் மேலும், "மோகனை ஒரு விவசாயி என நாம் சொல்லலாம்.. அவர் விளைவிப்பதுதான் நாம் உண்ணப் போகிறோம். யூடியூப் மண்ணை வழங்குகிறது.. அங்கு எல்லோரும் வந்து, சத்தான அல்லது நச்சுத்தன்மை வாய்ந்த செடிகளை நடலாம். பல வழிகளில், உலகெங்கும் வாழும் மக்களுக்கான கலாச்சார உணவு முறையை யூடியூப் உருவாக்கி வருகிறது" என்றும் அந்த இதழ் தெரிவித்தது.
தமிழர்
நீல் மோகன், அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்திலுள்ள அன் ஆர்பரில் 1973இல் பிறந்தார். இவரது பெற்றோர் தமிழர்கள் ஆவர். 1980களின் மத்தியில் குடும்பம் உத்தரப் பிரதேசத்தின் லக்னோவுக்குக் குடிபெயர்ந்தது. அங்கு அவர் இந்தி, சமஸ்கிருதம் கற்றார். சமஸ்கிருதத்தின் விதிகளை அடிப்படையாகக் கொண்ட அமைப்பை கம்ப்யூட்டர் புரோகிராம் உடன் அவர் ஒப்பிட்டார்.
மோகன் தனது இரு சகோதரர்களுடன் உயர்கல்விக்காக அமெரிக்கா சென்றார். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் எம்பிஏ பட்டங்களைப் பெற்றார். அவரது சகோதரர் அனுஜ் 30 வயதில் நீச்சல் குள விபத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.
யார் இந்த நீல் மோகன்
முதலில் மோகன் கன்சல்டிங் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பிறகு அவர் டிஜிட்டல் விளம்பர ஸ்டார்ட்அப்பான நெட்கிராவிட்டி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். நெட்கிராவிட்டி நிறுவனத்தை டபுள் கிளிக் என்ற நிறுவனம் வாங்கிய நிலையில், அங்கேயே தொடர்ந்து வேலை செய்தார். 2007ல் டபுள் கிளிக் நிறுவனத்தைக் கூகுள் 3.1 பில்லியன் டாலருக்கு வாங்கியது. அப்போது ட்விட்டர் நிறுவனத்தில் சேர்வார் எனச் சொல்லப்பட்டது. இருப்பினும், கூகுள் நிறுவனத்திலேயே தொடர்ந்து பணிபுரிந்தார்.
கூகுள் நிறுவனத்தில் தொடர்ந்து வேலை செய்ததால் நீல் மோகனால் சூசன் வோஜிஸ்கியுடன் நெருக்கமாக வேலை செய்ய முடிந்தது. இந்த சூசன் தான் அப்போது, யூடியூப்பின் சிஇஓவாக இருந்தவர். நீல் மோகனை சூசன் யூடியூப்பிற்கு அழைத்து வந்த நிலையில், இருவரும் ஒன்றாகப் பல ஆண்டுகள் வேலை செய்தனர். அப்போது தான் எதிர்பாராத விதமாக சூசனுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் நீல் மோகன் வசம் யூடியூப் சிஇஓ பொறுப்பை சூசன் ஒப்படைத்தார்.
முக்கிய சம்பவம்
2021ல் அமெரிக்க நாடாளுமன்றக் கட்டிடத்தில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து டிரம்பின் சேனல் யூடியூப் தளத்தில் இருந்து நீக்கப்பட்டது. இது பேச்சு சுதந்திரத்திற்கு எதிராக இருப்பதாகச் சொல்லி 2021ல் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்டோர் யூடியூப் மீது வழக்குத் தொடுத்தனர். டிரம்ப் சேனலுக்கு மீண்டும் அனுமதி தரப்பட்ட பிறகும் இந்த வழக்கு நீட்டித்தது. இறுதியில் 2025 செப்டம்பர் மாதம் மோகன் முயற்சியால் வழக்கு முடித்துக் கொள்ளப்பட்டது. யூடியூப் நிறுவனம் எந்தவொரு தவறையும் ஒப்புக்கொள்ளாமல், 24.5 மில்லியன் டாலர் இழப்பீடு செலுத்தி இவ்வழக்கை முடித்துக்கொண்டது.
இத்தொகையில் 22 மில்லியன் டாலர், வெள்ளை மாளிகை தொடர்பான தொண்டு நிறுவனத்திற்குச் சென்றது. மீதிப்பணம் மற்ற வழக்குத் தொடுத்தவர்களுக்குக் கிடைத்தது. மோகனுக்கு மனைவி ஹேமா சரீன் என்ற மனைவியும் இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications