லண்டனில் படிப்பு.. உளவு பார்ப்பதில் வல்லவர்! வங்கதேசத்தில் ஆட்சி அமைக்கும் ஜெனரல் ஜமான்.. யார் இவர்?
டாக்கா: வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக நடந்த போராட்டம் மிகப் பெரிய வன்முறையாக வெடித்துள்ளது. அங்கே நிலைமை கையைவிட்டுச் சென்ற நிலையில், ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதையடுத்து அந்நாட்டின் ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் தற்காலிகமாக ஆட்சி அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளார். யார் அவர்? அவரது பின்னணி என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
வங்கதேசத்தில் கடந்த சில வாரங்களாகவே இட ஒதுக்கீட்டிற்கு எதிராகப் போராட்டங்கள் நடந்தன. உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து போராட்டங்கள் சற்று ஓய்ந்த நிலையில், மீண்டும் சில நாட்களாக வன்முறை போராட்டங்கள் வெடித்தன.

இந்த வன்முறை போராட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த போராட்டத்தை ஒடுக்க ஷேக் ஹசீனா அரசு எடுத்த நடவடிக்கைகளுக்குப் பெரிதாகப் பலன் கிடைக்கவில்லை.
நாட்டை விட்டு வெளியேறினார்: இதனால் ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். ஷேக் ஹசீனா இப்போது நாட்டை விட்டு வெளியேறி இருக்கும் நிலையில், அங்கே தற்காலிகமாக ஆட்சியை அமைக்கப் போவதாக அந்நாட்டின் ராணுவத் தளபதி ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான் அறிவித்துள்ளார். ராணுவ தளபதியாக இருந்து திடீரென வங்கதேசத்தில் ஆட்சியை அமைக்க உள்ள இந்த ராணுவத் தளபதி ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான் யார்.. இவரது பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
யார் இந்த ஜமான்: 58 வயதான ஜமான் கடந்த ஜூன் 23ம் தேதி தான் ராணுவ தளபதியாகப் பொறுப்பேற்றார். ராணுவ தளபதியாகப் பொறுப்பேற்று ஒரே மாதத்தில் அவர் இப்போது ஆட்சியை அமைக்க இருக்கிறார். ராணுவ தளபதியாகப் பொறுப்பேற்ற போது அவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அந்த பதவியில் இருப்பார் எனக் கூறப்பட்டு இருந்தது. ஆனால், இப்போது அவர் அங்கே ராணுவ ஆட்சியை அமைத்துள்ளார். இது தற்காலிகமானது எனச் சொன்னாலும் எவ்வளவு நாள் அவர் தலைமை பதவியில் இருப்பார் என்பதற்குக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
1966இல் வங்கதேச தலைநகர் டாக்காவில் பிறந்த அவர், முதலில் ஜமான் வங்கதேச தேசிய பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றார். பிறகு லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் பாதுகாப்புப் படிப்பில் மேற்படிப்பையும் படித்துள்ளார். இவர் கடந்த 1997 முதல் 2000 வரை வங்கதேச ராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் முஹம்மது முஸ்தாபிசுர் ரஹ்மானின் மகள் சரஹ்னாஸ் கமாலிகாவை மணந்தார்.
முக்கியமான நபர்: ராணுவத் தளபதியாக நியமிக்கப்படும் முன்பு, அவர் சுமார் 6 மாதங்கள் தலைமைத் தளபதியாக இருந்தார். அப்போது அவர் ராணுவ நடவடிக்கைகள், உளவுத்துறை நடவடிக்கை, ராணுவ பட்ஜெட் என பல விஷயங்களைக் கவனித்து வந்தார். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ராணுவத்தில் பணியாற்றி வரும் வாக்கர்-உஸ்-ஜமான், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஹசீனாவின் நம்பிக்கைக்குரிய நபர்களில் ஒருவராகப் பார்க்கப்பட்டவர். இதன் காரணமாக அவர் நேரடியாகப் பிரதமர் அலுவலகத்தின் கீழ் ஆயுதப் படைப் பிரிவிலும் தலைமை அதிகாரியாக வேலை செய்துள்ளார்.
வங்கதேச ராணுவம் நவீனமயமாகக் காரணமாக இருந்த நபர்களில் இந்த ஜமான் முக்கிய நபராகக் கருதப்படுகிறார். இந்த மாதம் வங்கதேசத்தில் வன்முறை வெடித்த நிலையில், பொதுமக்கள் உயிர், பொதுச் சொத்து பாதுகாப்பை உறுதி செய்ய ராணுவ வீரர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications