இதுதான் விஷயமே.! உள்ளே வரும் அமெரிக்க ஆயுதங்கள்? இஸ்ரேல் நாட்டிலேயே இருக்காம்! அப்போ அடுத்து அதுதானா
அவிவ்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையே யுத்தம் ஆரம்பித்துள்ள நிலையில், அமெரிக்கா இதில் இஸ்ரேலுக்கு முழு ஆதரவு கொடுத்துள்ளது. இது போரிலும் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.
கடந்த சனிக்கிழமை யாருமே எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் படை திடீரென தாக்குதலை ஆரம்பித்தது. இந்த தாக்குதலை இஸ்ரேல் துளியும் எதிர்பார்க்கவில்லை. இதனால் தொடக்கத்தில் அவர்கள் திணறினார்கள்.

இருப்பினும், அதன் பிறகு சுதாரித்துக் கொண்டு பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் இஸ்ரேலில் நாட்டில் யுத்தம் தொடங்கியுள்ளது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால் இரு தரப்பும் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அமெரிக்காவும் இந்த போரைக் கூர்ந்து கவனித்து வருகிறது. ஏனென்றால் பல ஆயிரம் அமெரிக்கர்கள் இஸ்ரேல் நாட்டில் இருக்கிறார்கள். அங்குள்ள அமெரிக்கர்களுக்கு எதாவது பிரச்சினை ஏற்படுகிறதா என்பதைக் கவனித்து வருகிறது.
அமெரிக்கா: இதற்கிடையே இஸ்ரேலுக்கு கூடுதல் ஆயுதங்களை அனுப்ப உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மேலும், இஸ்ரேலுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தங்கள் கடற்படை போர்க்கப்பல்களை அந்நாட்டிற்கு நெருக்கமாக நகர்த்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
விமானம் தாங்கி கப்பலான ஜெரால்ட் ஆர். ஃபோர்டு மற்றும் 5 ஏவுகணை கப்பல்கள் ஏற்கனவே மத்தியதரைக் கடலில் இருக்கும் நிலையில், அவற்றை இஸ்ரேலுக்கு அருகே செல்ல அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஜே. ஆஸ்டின் உத்தரவிட்டுள்ளார். கப்பல்கள் ஏற்கனவே இஸ்ரேலை நோக்கிப் புறப்பட்டுவிட்டதாகவும் இருப்பினும் அவை அங்குச் சென்றடைய சில நாட்கள் வரை ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
போர் விமானங்கள்: மேலும், இப்பகுதியில் விமானப்படை போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக ஆஸ்டின் கூறினார். இவை என்றும் இஸ்ரேலுடன் அமெரிக்கா துணை நிற்கும் என்பதையே காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உடன் பேசிய அதிபர் பைடன், கூடுதல் உதவிகள் அளிக்கப்படும் என உறுதியளித்தார். இந்தச் சூழலில்தான் அமெரிக்கா இந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஹமாஸ் உள்ளிட்ட அந்த பகுதிகளில் நிலவும் சிக்கலைச் சமாளிக்க இஸ்ரேல் நாட்டிற்கு உதவுவோம் என அமெரிக்கா ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இந்த உதவிகள் வந்துள்ளது.
அமெரிக்கா- இஸ்ரேல் உறவு: இஸ்ரேல் நாட்டில் உள்ள நீதித்துறை அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் கடந்த சில மாதங்களாக அந்நாட்டின் பிரதமர் நெதன்யாகு ஈடுபட்டிருந்தார். இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் பைடன்- நெதன்யாகு இடையே கருத்து வேறுபாடு நிலவியது. இருப்பினும், அதை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு இஸ்ரேல் நாட்டிற்கு அமெரிக்கா உதவிகளை அறிவித்துள்ளது.
யுத்தம் ஆரம்பித்த உடனேயே இஸ்ரேல் பிரதமரிடம் அமெரிக்க அதிபர் பைடன் பேசியிருந்தார். அப்போது இஸ்ரேலியர்களை ஹமாஸ் படையினர் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றுள்ளது குறித்தும் இரு தரப்பும் ஆலோசித்துள்ளனர். அப்போது பயங்கரத்திற்கு எந்தவொரு விளக்கத்தையும் தர முடியாது என்று கூறி பைடன், உலக நாடுகள் இஸ்ரேலுக்கு துணை நிற்கும் என்றும் கூறியுள்ளார்.
ஆயுதங்களை அனுப்பும் அமெரிக்கா: இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருக்கு வெடிமருந்துகள் உட்படக் கூடுதல் ஆயுதங்களை வழங்க உள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஆஸ்டின் அறிவித்துள்ளார். அதேநேரம் எந்த மாதிரியான ஆயுதங்கள் வழங்கப்படுகிறது என்பது குறித்த தகவல்களைப் பகிர அமெரிக்கா மறுத்துவிட்டது. இருப்பினும், ஏவுகணை தாக்குதல்களைச் சமாளிக்க உதவும் அயர்ன் டோம் பாதுகாப்பு அமைப்பு, தாக்குதல் விமான குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை இடை மறுத்துத் தாக்கும் ஆயுதங்கள் இஸ்ரேலுக்கு வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
மேலும், இஸ்ரேல் நாட்டில் பல ஆயிரம் அமெரிக்கர்கள் வசித்து வரும் நிலையில், தேவைப்பட்டால் அவர்களை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்ற தெளிவுபடுத்திய அமெரிக்கா அதிகாரிகள், இருப்பினும், அமெரிக்கர்களைக் கடற்படைக் கப்பல்கள் மூலம் பாதுகாப்பாக அழைத்து வருவது குறித்தும் ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தனர்.
இஸ்ரேலில் உள்ள அமெரிக்க ஆயுதங்கள்: அமெரிக்கா ஏற்கனவே இஸ்ரேலுக்கு ஒவ்வொரு ஆண்டும் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளைச் செய்து வருகிறது. அதில் பெரும்பாலான ஆயுதங்கள் ஏற்கனவே இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பிளிங்கன் தெரிவித்துள்ளார். இது தவிர இஸ்ரேல் நாட்டில் உள்ள தனது ராணுவ தளங்களில் சுமார் $2 பில்லியன் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளையும் அமெரிக்கா வைத்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் மோதல்கள் ஏற்படும் போது அதைப் பயன்படுத்தவே அமெரிக்கா அங்கே ஆயுதங்களை வைத்துள்ளது. அங்கே 155-மில்லிமீட்டர் பீரங்கி குண்டுகள் தொடங்கிப் பல அதிநவீன ஆயுதங்களை அமெரிக்கா சேமித்து வைத்துள்ளது. அமெரிக்கா இங்கே ஆயுதங்களைச் சேகரித்து வைத்துள்ளது கடந்த காலங்களில் இரு தரப்பிற்கும் உதவி இருக்கிறது. உதாரணத்திற்கு, உக்ரைன் போர் சமயத்தில் இஸ்ரேல் அனுமதியுடன் இங்குள்ள ஆயுதங்களைத் தான் அமெரிக்கா முதலில் உக்ரைனுக்கு அனுப்பியது.
கேம் சேஞ்சர்: இது மட்டுமின்றி அவசரக் காலங்களில் இதை இஸ்ரேல் பயன்படுத்தவும் அமெரிக்கா அனுமதித்துள்ளது. இஸ்ரேலில் இப்போது தொடங்கியுள்ள யுத்தம் நீண்ட காலத்திற்குத் தொடர்ந்தால் அமெரிக்காவின் இந்த ஆயுத சேமிப்புகள் இஸ்ரேலுக்கு பேருதவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications