பல்லாயிரம் ஆண்டுகளாக.. மனித குலம் காணாத அதிசயம்.. சீனாவில் 630 அடி குழி.. உள்ளே பார்த்தால் சொர்க்கம்
பெய்ஜிங்: சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட 630 அடி குழி உலக மக்கள் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த குழி குறித்த ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
பூமியில் நாம் காணாத.. நமக்கு தெரியாத பல அதிசயங்கள்.. ஆச்சர்யங்கள் உள்ளன. என்னதான் மனிதன் வேற்று கிரகங்களில் ஆராய்ச்சிகள் செய்தாலும் இன்னமும் நாம் கண்டுபிடித்த பல இடங்கள், உயிரினங்கள். வைரஸ்கள் இந்த பூமியிலேயே கூட இருக்கின்றன.
அப்படி ஒரு அழகிய சொர்க்கபுரியைத்தான் சீனாவில் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

குழி
பூமியில் இயற்கையாக பல இடங்களில் பள்ளங்கள் காணப்படும். பள்ளம் என்றால், உள்ளூரில் சாலைகளில் இருக்கும் பள்ளத்தை சொல்லவில்லை. பெரிய அளவில், ராட்சச தோற்றத்துடன் காணப்படும் குழிகள். தமிழ் படங்கள் பலவற்றில் வெளிநாட்டு பாடல்கள் எடுக்க இது போன்ற குழிகளுக்கு செல்வது முன்பு வழக்கம். ஏன் கிங்காங் படங்களில் கூட... கிங்காங் இது போன்ற குழி ஒன்றுக்கு உள்ளே வாழ்வதாக சித்தரிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த குழிகள் பல இப்போதும் பூமியில் உள்ளன.

சீனா குழி
பூமி தோன்றிய போதும், அதன்பின் ஏற்பட்ட நில அடுக்குகள் நகர்வுகள் காரணமாகவும் பல இடங்களில் மலைகள் தோன்றின. இதே காரணத்தால் பூமியில் பல இடங்களில் குழிகளும் தோன்றின. இப்படி உருவான குழிகளில் பல குழிகள் இப்போதும் மனித குலத்திற்கே தெரியாமல் பூமியில் உள்ளன. அப்படித்தான் சீனாவில் ராட்சச குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெற்கு சீனாவில் இருக்கும் குவாங்சி ஜுவான் பகுதியில் இந்த குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆச்சர்யம்
இது மொத்தம் 630 அடி ஆழம் கொண்டு இருக்கிறது. அதேபோல் 1000 அடி நீளம். 490 அடி அகலம் கொண்டு இருக்கிறது.சீனாவில் இருக்கும் 30க்கும் மேற்பட்ட குழிகளில் இதுவும் ஒன்று என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. உலகில் இருக்கும் மிகப்பெரிய குழிகளில் இதுவும் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆராய்ச்சியாளர்கள், இயற்கை ஆர்வலர்கள் நடத்திய சுற்று பயணம் ஒன்றில் இந்த குழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் இந்த குழிக்கு செல்ல மூன்று வழிகள் உள்ளன.

உயரமான மரம்
இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.. இந்த குழிக்கு உள்ளே டிரெக்கிங் சென்று பார்த்ததில்.. அதில் முழுக்க முழுக்க மரங்கள்.. வினோதமான செடிகள், காய்கள், கனிகள், அழிந்து போனதாக கருதப்படும் சில அரிய வகை மூலிகைகள் பல காணப்பட்டு இருக்கின்றன. இதில் சில மரங்கள் 131 அடி உயரம் கூட இருந்துள்ளன. ஆம்.. திருவள்ளூர் சிலை குமரியில் இருக்கிறதே. கிட்டத்தட்ட அதே உயரத்திற்கு கூட இங்கு மரங்கள் இருந்துள்ளன.

சொர்க்கம்
கிட்டத்தட்ட அந்த பகுதி ஒரு சொர்க்கம் போல காணப்பட்டு இருக்கிறது. எழில் கொஞ்சும் தோற்றத்தில் இருந்துள்ளது. மனித குலம் இதுவரை பார்த்திடாத உயிரினங்கள் கூட இங்கு இருக்க வாய்ப்பு உள்ளது என்று அந்த பகுதியை ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர் குழுவின் தலைவர் சென் லெக்சின் தெரிவித்துள்ளார். கொஞ்சம் கூட மாசுபடாமல்., மிகவும் தூய்மையாக இந்த இடம் இருப்பதாகவும். இங்கு மனிதர்கள் இதுவரை வந்தது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications