உலக நாடுகள் "வாய்ஸ்" மாறுதே.. இஸ்ரேலுக்கு வந்த புது தலைவலி.. ஒரு வேலை உக்ரைன் நிலை ஏற்படுமோ!
டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் விவகாரம் 20 நாட்களாகத் தொடரும் நிலையில், இது சர்வதேச அளவிலும் வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது.
இஸ்ரேல் விவகாரத்தில் உலக நாடுகள் இப்போது இரு வேறு நிலைப்பாடுகளை எடுத்துள்ளன. மேற்குலக நாடுகள் முழுக்க முழுக்க இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளன. அதேநேரம் அரபு நாடுகள் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளன.

இதற்கிடையே ஜோர்டான் ராணி ரனியா அல் அப்துல்லா இந்த விவகாரத்தில் மேற்குலக நாடுகளைச் சாடியுள்ளார். மக்களைச் சுட்டுக் கொள்வதைத் தவறு எனச் சொல்லும் மேற்குலக நாடுகள், அவர்கள் மீது ஏவுகணைகளை வீசி கொல்வதைக் கண்டிக்கவில்லை என்று சாடியுள்ளார்.
இஸ்ரேல் விவகாரம்: இது இஸ்ரேல் விவகாரத்தை மத்திய கிழக்கு நாடுகள் எப்படிப் பார்க்கிறது.. மற்ற மேற்குலக நாடுகள் எப்படிப் பார்க்கிறது என்பதில் இருக்கும் வேறுபாட்டை நமக்கு உணர்த்துகிறது.. மேலும், இஸ்ரேல் நாட்டிலும் மக்களுக்குப் பாதுகாப்பின்மை உணர்வு அதிகரித்துவிட்டது என்றே சொல்லலாம். இஸ்ரேலில் 64% மக்கள் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என உணர்வதாகத் தெரிவித்துள்ளனர். ஹமாஸ் தொடர்ச்சியாக நடத்தி வரும் ஏவுகணை தாக்குதலே இதற்குக் காரணமாகும்.
அக். 7ஆம் தேதி தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் சிலர் மறைந்திருக்கலாம் என்றும் அவர்கள் இரண்டாவது தாக்குதலை ஆரம்பிக்கலாம் என்றும் சிலர் அஞ்சுகின்றனர். இதனால் இஸ்ரேல் அரசின் நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு மக்களின் ஆதரவு முழுமையாக இருக்கிறது என்றே சொல்லலாம். அதாவது யுத்தம் சார்ந்து இஸ்ரேல் எடுக்கும் முடிவுகளுக்கு அந்நாட்டு மக்கள் ஆதரவாகவே இருக்கிறார்கள். அதேநேரம் இஸ்ரேலுக்கு வெளியே நிலைமை அப்படி இல்லை.
சர்வதேச நாடுகள்: மேற்குலக நாடுகள் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்தது. அக். 7 தாக்குதலுக்குப் பிறகு பைடன் தொடங்கிப் பல சர்வதேச தலைவர்கள் இஸ்ரேலுக்குச் சென்றனர். துணையாக இருப்போம் என்றும் கூறினர். இதனால் காசா மீது படையெடுக்கும் போது தங்களுக்கு எதிர்ப்பு வராது என்றே இஸ்ரேல் நினைத்தது. ஆனால், படையெடுப்பு வேண்டாம் என்றே அனைத்து சர்வதேச தலைவர்களும் கூறி வருகின்றனர்.
மேற்குலக நாடுகளின் ஆதரவு இஸ்ரேலுக்கு இருந்தாலும், அதற்கு எதிரான குரல்களும் அதிகரித்தே வருகிறது. பாலஸ்தீனிய மக்கள் 56 ஆண்டுகளாக இன்னல்களை எதிர்கொண்டு வருகிறார்கள் என்று ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். ஐநாவின் தலைவர் இஸ்ரேலுக்கு எதிராகக் கருத்து கூறியிருப்பது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
அதிகரிக்கும் எதிர்ப்பு: அதேபோல துருக்கி நாட்டின் அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் வெளிப்படையாக ஹமாஸ் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளார். தனது இஸ்ரேல் பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்த அவர், "ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு இல்லை. அவர்கள் ஒரு போராளிக் குழு.. தங்கள் நிலத்தையும் மக்களையும் பாதுகாக்கும் ஒரு குழு. குழந்தைகளைக் கொல்லும் போக்கை ஒத்துக் கொள்ளவே முடியாது" என்று சரமாரியாக இஸ்ரேலைச் சாடியிருந்தார்.
பெரும்பாலான அரசு நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்துள்ளது. அதேபோல மற்றொரு முக்கிய இஸ்லாமிய நாடான மலேசியா பிரதமர் அன்வார் இப்ராகிம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆதரவு இருப்பதால் இஸ்ரேல் நாட்டிற்கு ஆணவம் அதிகரித்துவிட்டது என்றும் இதன் காரணமாகவே இஸ்ரேல் பிரச்சினையை முடிக்க ஆர்வம் காட்டவில்லை எனச் சாடியுள்ளார்.
தனித்துவிடப்படும் இஸ்ரேல்: இப்படி உலக நாடுகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தே இருக்கிறது. உக்ரைன் விவகாரத்தில் ஒரு சில நாடுகளைத் தவிர அனைத்து நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்திருந்தது. ஆனால், அதில் கூட சர்வதேச சமூகத்தால் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர முடியவில்லை. போர் ஓராண்டிற்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது.
இந்தச் சூழலில் இப்போது இஸ்ரேல் விவகாரத்தில் சர்வதேச நாடுகள் இரு வேறாகப் பிரிந்துள்ளது. மேலும், படையெடுப்பிற்கு உலக நாடுகளிடம் இருந்து இஸ்ரேலுக்குத் தான் எதிர்பார்த்த அளவுக்கு ஆதரவு முழுமையாகக் கிடைக்கவில்லை. நிலைமை இப்படி இருப்பதால் இந்த மோதல் அவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வராது என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.












Click it and Unblock the Notifications