கள்ளத்தொடர்பு நிரூபிக்கப்பட்டால் மனைவிக்கு ஜீவனாம்சம் தர முடியாது.. மகள்களை பராமரிக்கும் உரிமை ரத்து
துபாய்: கள்ளத்தொடர்பு நிரூபிக்கப்பட்ட பெண்ணுக்கு, தனது மகள்களை பராமரிக்கும் உரிமைக்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள அஜ்மனில் வசிக்கும் ஒரு பெண், மற்றொரு ஆணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக அவரது கணவருக்கு சந்தேகம் எழுந்தது.
அதை தொடர்ந்து, மனைவியின் செயல்பாடுகளை கண்காணித்த கணவனின் சந்தேகத்தை உறுதிபடுத்துவதற்கு தேவையான ஆதாரங்கள் சிக்கின.
இதனையடுத்து, மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உச்ச நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்தார். அப்போது, தனது 3 மகள்களை பராமரிக்க ஜீவனாம்சம், வசிப்பதற்கான வீட்டு வாடகை, வேலைக்காரிக்கு சம்பளம் ஆகியவற்றை மாதந்தோறும் கணவனிடமிருந்து பெற்றுத் தர வேண்டும் என்று வழக்கு விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்ட பெண் சார்பில் வாதாடப்பட்டது.
அந்த வாதத்தை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்ட நீதிபதி, ''வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மகள்களை பராமரிக்கும் உரிமையை அந்த பெண்ணிடம் ஒப்படைக்க முடியாது. அதன் அடிப்படையில், முன்னாள் கணவரிடம் எவ்வித ஜீவனாம்சமும் கோரவும் முடியாது. மேலும், 3 மகள்களை பராமரிக்கும் பொறுப்பையும் தந்தையிடமே ஒப்படைக்கிறேன்" என்று தீர்ப்பளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications