என்.எஸ்.ஜி. விவகாரம்: சீனா அதிபர் ஜீ ஜின்பிங்கிடம் ஆதரவு கோரினார் பிரதமர் மோடி
தாஷ்கண்ட்: அணுசக்தி மூலப் பொருள் விநியோக நாடுகளின் கூட்டமைப்பான என்.எஸ்.ஜி.யில் இந்தியா உறுப்பினராவதற்கு சீனா அதிபர் ஜீ ஜின்பிங்கை இன்று நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆதரவு கோரினார்.
48 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட என்.எஸ்.ஜி.யில் இந்தியா உறுப்பினராவதற்கு தீவிரமாக முயற்சித்து வருகிறது. அமெரிக்கா அதிபர் ஒபாமாவின் பதவி காலத்துக்குள் உறுப்பினராகிவிட வேண்டும் என்பது பிரதமர் மோடியின் எண்ணம்.
அந்நாட்டின் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன், டொனால்டு ட்ரம்ப் ஆகியோர் இந்த விவகாரத்தில் என்ன நிலைப்பாடு மேற்கொள்வார்கள் எனத் தெரியாது. ஆகையால்தான் இந்தியா படுதீவிரமாக முயற்சித்து வருகிறது.

ஜெய்சங்கர் பயணம்
என்.எஸ்.ஜி.யின் நாளைய கூட்டத்தில் இந்தியாவை உறுப்பினராக சேர்ப்பதற்கு குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. இதற்காக வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர் சியோல் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஷாங்காய் மாநாடு
இதனிடையே சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 6 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் மாநாடு தாஷ்கண்ட்டில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பிரதமர் மோடியும் பங்கேற்கிறார்.

ஜின்பிங்கை சந்திக்கும் மோடி
இம்மாநாட்டின் போது சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை மோடி சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது என்.எஸ்.ஜி.யில் இந்தியா உறுப்பினராவதற்கு சீனாவின் ஆதரவை பிரதமர் மோடி கோரினார்.

சீனாவின் நிலைப்பாடு
சீனாவைப் பொறுத்தவரையில் என்.எஸ்.ஜி.யில் இந்தியா சேருவதற்கு மிகக் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. இந்தியாவை உறுப்பினராக்கினால் பாகிஸ்தானையும் சேர்க்க வேண்டும் என்று அந்நாடு வலியுறுத்தி வருகிறது.
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகள் என்எஸ்ஜியில் சேரக் கூடாது என்றும் சீனா கூறி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications