சாவைவிட மோசமானது எனது பலாத்காரம்.. ஐஎஸ் தீவிரவாதிகள் பற்றி இளம் பெண் கண்ணீர்
லண்டன்: சகோதரர்கள் 6 பேரையும், தாயையும் கொலை செய்து தன்னை, வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு கொடுமையாக பாலியல் பலாத்காரம் செய்தார்கள் என்று, ஈராக்கின் யாசிதி இனப்பிரிவை சேர்ந்த 21 வயது இளம் பெண் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு எதிராக உலக நாடுகளின் ஆதரவை பெறுவதற்கும், அந்த தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு உதவுவதற்காகவும் ஐரோப்பாவில் நடைபெறும் இயக்கத்தில் பங்குபெற்றுள்ளார் 21 வயது இளம் பெண் நாதியா முராத்.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிலுள்ள காமக்கொடூரர்களால் பாதிக்கப்பட்டவர் இந்த பெண். மத்திய லண்டனிலுள்ள காங்கிரஸ் ஹவுஸ் வர்த்தக யூனியனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாதியா பேசியதாவது: நான் இங்கு பேசுவது எனக்காக மட்டுமில்லை. போர் பிராந்தியத்தில் பாதிக்கப்பட்டுள்ளன, எல்லா பெண்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும்தான்.
கொலை, பலாத்காரம்
சுமார் 5800 யாசிதி இனத்து பெண்களையும், குழந்தைகளையும், தீவிரவாதிகள் சிறை பிடித்தனர். அதில் பலரை கொன்றனர். பலரை வெவ்வேறு தேசங்களுக்கு சிதறடித்தனர். பொதுவாக, வீட்டில் உள்ள ஆண்களை தீவிரவாதிகள் கொலை செய்துவிடுகிறார்கள். பெண்களையும், குழந்தைகளையும் கவர்ந்து செல்கிறார்கள்.
பல பாவங்கள்
இந்த தீவிரவாதிகள், கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட அனைத்து பாவங்களையும், இஸ்லாமின் பெயரால் செய்கிறார்கள். எனக்கு நடந்த சம்பவங்களை கேட்டால் இவ்வளவு கொடுமைகளை அனுபவித்துள்ளீர்களா என பரிதாபம் வரும். ஆனால், என்னைவிட மோசமாக பாதிக்கப்பட்டவர்களும் உள்ளனர் என்பது கசப்பான உண்மை.
சகோதரர்கள், தாய்
எனது, ஆறு சகோதரர்களையும், தாயையும் தீவிரவாதிகள் கொலை செய்தனர். ஆனால், 10 சகோதரர்களை இழந்த குடும்பத்தையும் நான் பார்த்தேன். இன்னும் 3400க்கும் மேற்பட்ட பெண்கள் அந்த தீவிரவாதிகளின் கோரப்பிடியில் சிக்கியுள்ளனர்.
செக்ஸ் அடிமைகள்
யாசிதி இனத்துக்கு எதிராக ஐஎஸ்ஐஎஸ் ஒரு இனப்படுகொலையை நிகழ்த்திவருகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். எனது சொந்த ஊரில் பூமிக்கு அடியில் இருந்து 100 பெண்கள் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அத்தனை பேரும் தீவிரவாதிகளால் ஆசை தீர பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டவர்கள். பல பெண்களை பலாத்காரத்திற்கு பிறகு செக்ஸ் அடிமைகளாக விற்பனை செய்கிறார்கள்.
உலக நாடுகள் வேடிக்கை
ஒன்றரை வருடங்களுக்கு மேலாக யாசிதிகளுக்கு எதிராக இனப்படுகொலை நடக்கிறது. உலக நாடுகள் அமைதியாக வேடிக்கை பார்ப்பதுதான் இதற்கு காரணம். எனது தாயின் கண் முன்பாக எனது 6 சகோதரர்களையும் தீவிரவாதிகள் கொடூரமாக கொலை செய்தனர். பிறகு எனது தாயையும் கொன்றனர்.
சாவைவிட மோசம்
என்னை மொசூல் நகரத்திற்கு கொண்டு சென்று மாறி, மாறி பலாத்காரம் செய்தனர். அந்த காலகட்டத்தில் எனது தாய், சகோதரர்கள் நினைவே எனக்கு வரவில்லை. ஏனெனில் ஒரு பெண்ணுக்கு சாவை விட மோசமானதான ஒன்று, எனக்கு தொடர்ச்சியாக 3 மாதங்களுக்கு நடந்தது. இவ்வாறு அப்பெண் தெரிவித்தார்.