அல்கொய்தா மீது 'தங்க வாள்' தாக்குதலை ஆரம்பித்துள்ள ஏமன்
சனா: அல்கொய்தா தீவிரவாதிகள் பதுங்கியுள்ள பகுதிகளில் ஏமன் நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
வளைகுடா நாடான ஏமனின் தெற்கு பிராந்தியத்தில் அல்கொய்தா தீவிரவாத அமைப்பினர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து ஏமன் நாட்டு ராணுவம் அப்பகுதியில் தாக்குதலை தொடங்கியுள்ளது.
இந்த தாக்குதலில் பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுவதாகவும், மஃபாட் மண்டலத்தின் மலைப்பகுதிகளில் அல்கொய்தா பதுங்கியுள்ள பகுதிகளில் இத்தாக்குதல் நடத்தப்படுவதாகவும் ராணுவ அதிகாரி ஒருவர் உள்நாட்டு செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
மஃபாட் பகுதியை நோக்கி தளவாடங்களுடன் ராணுவ வீரர்கள் வாகனங்களில் விரைந்ததை பார்த்ததாக உள்ளூர் மக்கள் உறுதி செய்தனர். ராணுவம் நடத்தி வரும் இத்தாக்குதலுக்கு 'ஆபரேசன் கோல்டன் ஸ்வார்ட்ஸ்' அதாவது 'தங்க வாள்கள் நடவடிக்கை' என்று பெயரிடப்பட்டுள்ளது.
பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்துள்ள வளைகுடா நாடுகளில் செயல்படும் அல்கொய்தா அமைப்பினர் அவ்வப்போது, ராணுவத்தினர் மீதும், வெளிநாட்டு அமைப்புகள் மீதும் தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
2009ம் ஆண்டு முதல் இந்த பிராந்தியத்தில் பெருகியுள்ள அல்கொய்தாவின் ஆதிக்கம் ஏமன் நாட்டுக்கு மட்டுமல்லாமல், எண்ணை வளம் மிக்க அண்டை நாடான சவுதி அரேபியாவுக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது.












Click it and Unblock the Notifications