அமெரிக்காவில் மீண்டும் பனிப்புயல் அட்டகாசம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் வீசிய பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அவ்வப்போது வீசி வரும் பனிப்புயல்களால் சாலைகளில் பனி குவிந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.
இந்தியாவில் கோடை வெயில் வறுத்தெடுத்து வரும் நிலையில் திங்கள்கிழமை அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வீசிய பனிப்புயலால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
பனிப்புயல்
அட்லாண்டிக்கின் மையப்பகுதி, கிழக்கு அமெரிக்க பகுதிகளை மையமாக கொண்டு வீசிய பனிப்புயலின் தாக்கம் விர்ஜினியா, பென்சில்வேனியா, நியூஜெர்சி பகுதிகளிலும் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்
ஃபிலடெல்பியா பகுதியில் 4.5 இன்ச் அளவுக்கு பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. வாஷிங்டனில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவிலுள்ள ஹிலன்டேல் பகுதியில் மிக அதிகபட்சமாக 11 இன்ச் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.
ரயில் சேவை
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனை பொறுத்தளவில் மெட்ரோ ரயில் சேவை, விமான சேவை பாதிக்கப்பட்டிருந்தது. கடந்த கால பனிப்புயல் காலங்களை விட இம்முறை பனிக்கட்டிகளை அகற்றும் பணி துரித கதியில் நடந்துவருவதாக உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள்.
பேருந்து விபத்து
நியூயார்க்கிலிருந்து டோராவில் நகருக்கு சென்ற பஸ் பனிப்பொழிவின் தாக்கத்தால் பல்டி அடித்ததில் நான்கு பேர் காயமடைந்தனர். இந்த ஆண்டின் குளிர்காலம் இந்த பனிப்புயலுடன் முடிந்துவிட வாய்ப்புள்ளதாகவும், இனிமேல் வசந்த காலம் துவங்கும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் வானிலை ஆய்வு மையமோ, அதை உறுதிப்படுத்த தயக்கம் காட்டிவருகிறது.
நிர்வாகம்
அமெரிக்காவில் இந்தாண்டு பனிப்புயல் தாக்கம் அதிகம் இருந்ததால் அரசு நிர்வாகம் அடிக்கடி ஸ்தம்பித்தது குறிப்பிடத்தக்கது.