பிரதமர் மோடியும், அமித்ஷாவும் இரட்டை இலைகளால் ஆசி வழங்கும் பேனர்.. அப்போ டெல்லி மேலிட ஆதரவு அவருக்கா?
காஞ்சிபுரம்: பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா படத்துடன் அதிமுகவினர் பேனர் வைத்ததால் காஞ்சிபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
அதிமுக எம் ஜி ஆர் இளைஞர் அணி காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக இருந்த முத்தியால்பேட்டை ஆர்வி ரஞ்சித்குமாரை ஓ பன்னீர்செல்வம் தலைமையில் செயல்பட்டு வரும் அதிமுக அணியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக நியமித்து ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி புதிய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட முத்தியால்பேட்டை ஆர்வி.ரஞ்சித்குமாரை அறிமுகப்படுத்தும் விழா காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இதில் முத்தியால்பேட்டை ஆர்வி. ரஞ்சித் குமார் காஞ்சிபுரம், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து அண்ணா, பெரியார், எம்ஜிஆர், ஜெயலலிதா, சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

1008 தேங்காய்
மேலும் பிரசித்தி பெற்ற முத்தியால்பேட்டை பிரசன்ன ஆஞ்சநேயர் கோயிலில் 1008 தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினார். மேலும் ஓ.பி.எஸ் தலைமையிலான அதிமுக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் அறிமுகப்படுத்துவதற்கான நிகழ்ச்சியில் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

பேனர்
அந்த பேனர்களில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், பெரிய அளவில் இடம்பெற்று, அவர்கள் இரட்டை இலையை அட்சதையாக தூவுவதாகவும், அதனை ஓபிஎஸ் வணங்குவது போல பேனர்கள் வைக்கப்பட்டதால் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஓபிஎஸ் தரப்பு
இந்த விளம்பர பேனர்களை பார்த்த பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் ஓபிஎஸ் பாஜகவில் இணைவதற்கான முன்னோட்டமோ என்று நினைத்தபடியே விளம்பர பேனரை ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். ஆனால் உண்மையான அதிமுக ஓபிஎஸ் தரப்பு என்பதற்கு டெல்லி மேலிடமே தீர்ப்பு சொல்வதை போல் அந்த பேனர் அமைந்துள்ளதாகவும் சிலர் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

டெல்லி மேலிடத்தின் ஆதரவு யாருக்கு?
மேலும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை கடந்த முறை சென்னை பயணத்தின் போது கை குலுக்கி முதுகில் தட்டி கொடுத்த பிரதமர் மோடி இந்த முறை டெல்லியில் அவரை சந்திக்க நேரம் கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே டெல்லி மேலிடத்தின் ஆசியும் ஆசிர்வாதமும் ஆதரவும் ஓபிஎஸ்ஸுக்குத்தான் என அவர் தரப்பினர் ஆரவாரம் செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications