அத்தி வரதர் தரிசனத்திற்காக அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. காஞ்சியில் கடும் நெரிசல்
காஞ்சிபுரம்: விடுமுறை தினமான இன்று, காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருப்பதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஆந்திரா,கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. சுமார் 1,500 போலீசார், சுழற்சி அடிப்படையில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்
கூட்ட நெரிசலில் மயங்கி விழுவோருக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், கடந்த திங்கட்கிழமையன்று அத்தி வரதர் வைபவம் துவங்கியது. 40 ஆண்டுகளுக்கு பின், இந்த வைபவம் நடைபெறுவதால், அத்தி வரதரை தரிசிக்க, உள்ளூர், வெளியூர் பக்தர்கள் அன்றாடம் ஆயிரக்கணக்கில் வருகின்றனர்.
கடந்த 6 நாட்களில் சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி, முதல் சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து அதிகாலை 04.15 மணிக்கு புறப்படுகிறது.அதே போல் காஞ்சிபுரத்தில் இருந்து காலை 7.30 மணி முதல் இரவு 7.45 மணி வரை செங்கல்பட்டு, தாம்பரம், கடற்கரைக்கு 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
வைபவம் துவங்கிய நாள் முதல், தரிசனம் தொடர்பான நடைமுறைகள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகிறது. முதல் நாளே, 50 ரூபாய் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, உள்ளூர் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு அனுமதியும் ரத்து செய்யப்பட்டது. காரணம், வெளியூரிலிருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால், கூட்டத்தை கட்டுப்படுத்த இது போன்ற நடவடிக்கை எடுத்ததாக, கோவில் நிர்வாகம் தெரிவிக்கிறது.
வரும் நாட்களில், அத்திவரதரை தரிசக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை, அதிகரிக்க கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications