எனக்கா வெறுப்பு கண்.. கண்ணாடிதான் கருப்பு.. ஆனால் ஓபிஎஸ்ஸுக்கு உள்ளமே கருப்பு.. ஸ்டாலின் தாக்கு
துணை முதல்வர் ஓபிஎஸ் மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
காஞ்சிபுரம்: கருப்பு கண்ணாடி அணிந்து.. வெறுப்பு கண்ணோடு நான் பார்க்கிறேன் என்று ஓபிஎஸ் சொல்கிறார். நானாவது சில சமயத்திலதான் கருப்புக் கண்ணாடி அணிகின்றேன். ஆனால் ஓபிஎஸ் கருப்பு உள்ளத்தோடு எப்பவுமே இருக்கிறார்" என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சின்ன காஞ்சிபுரம் திராவிட நாடு அலுவலக கட்டிடத்தின் முகப்பில் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் முழு உருவச் சிலைகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
மோடி தலைமையில் பாசிச ஆட்சி நடக்கிறது. நதிகள் இணைக்கப்படவில்லை. அதி நவீன நகர திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. கருப்புப் பணத்தினை மீட்டு எல்லோர் கணக்கிலும் 15 லட்சம் போடுவேன் என்றார். 15 ரூபாய் கூட போடவில்லை.
உள்ளாட்சி தேர்தல்
மத்தியில் மன்னர் ஆட்சியும் மாநிலத்தில் கொத்தடிமை ஆட்சியும் நடைபெற்று வருகின்றது. ஜிஎஸ்டி வரி ரூ.5454 கோடியினை மத்திய அரசிடம் கேட்டுப்பெற தமிழக அரசுக்கு திராணியில்லை. நீதி மன்றம் எச்சரித்தும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை. 21 எம்எல்ஏக்களின் பதவி பறிக்கப்பட்டும் அங்கேயும் தேர்தல் நடத்தப்படவில்லை.
மிரட்டும் பாஜக
மக்கள் பிரச்சனைகளை பற்றி கவலைப்படாமல் மோடியின் காலடியில் விழுந்து கிடக்கிறார்கள். ஆனால் சிறிய கட்சிகள் கூட பாஜகவை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள். அதனால்தான் அதிமுகவை மிரட்டி கூட்டணிக்கு அடிபணிய வைத்துகொண்டிருக்கிறார்கள்.
உதவாக்கரை பட்ஜெட்
சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை உதவாக்கரை பட்ஜெட் என்று சொன்னேன். அதனால் வார்த்தையினை சபாநாயகர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிட்டார். ஆனால் ஓபிஎஸ், பதிலளித்து பேசும்போது 'எதிர்க்கட்சி தலைவர் பட்ஜெட்டை உதவாக்கரை பட்ஜெட் என்கிறார் என பேசி, அதே வார்த்தையை அவை குறிப்பிலே ஏறுவதற்கு வழியும் செய்து விட்டு... எதிர்கட்சித் தலைவர் கருப்பு கண்ணாடி அணிந்து வெறுப்பு கண்ணோடு பார்க்கிறார்' என கூறுகிறார்.
ஜெ.மரணம்
நானாவது சில சமயத்திலதான் கருப்புக் கண்ணாடி மட்டுமே அணிகின்றேன். ஆனால் ஓபிஎஸ் கருப்பு உள்ளத்தோடு உள்ளார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்று அவரது சமாதிக்கு சென்று சபதம் செய்தார். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த மர்மம் என்னவென்று கண்டுபிடிக்கப்படும்" என்றார்.