திடீரென பச்சை கலரில் மாறிய அரபிக் கடல்! துர்நாற்றம் வேறு! மீன்கள் கொத்து கொத்தாக உயிரிழக்கும் அபாயம்
கன்னியாகுமரி: குமரியில் வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக அங்குள்ள மீனவர்கள் அச்சத்திலும் குழப்பத்திலும் ஆழ்ந்து உள்ளனர்.
இந்த நாகரிக உலகத்தில் மனிதர்கள் பல்வேறு துறைகளில் மின்னல் வேகத்தில் வளர்ந்து வருகின்றனர். உற்பத்தித் துறையில், நாம் இப்போது அடைந்துள்ள இடம் என்பது மிகப் பெரியது.
பிரம்மாண்ட கட்டிடங்கள் தொடங்கிச் சிக்கலான பல விஷயங்கள் வரை அனைத்துமே இப்போது சாத்தியமாகி உள்ளது. அதேநேரம் இதற்கு நாம் என்ன விலை கொடுக்கிறோம் என்பதையும் பார்க்க வேண்டும்.

கன்னியாகுமரி
மனிதர்கள் ஏற்படுத்தும் மாசு காரணமாக பல்வேறு பாதிப்புகளை நாம் எதிர்கொண்டு வருகிறோம். இந்த பாதிப்புகள் உலகில் ஏதோ ஒரு மூலையில் ஏற்படுகிறது என நினைக்க வேண்டாம். உலகின் எந்தவொரு நாடும் இந்த பருவநிலை பாதிப்புகளில் இருந்து தப்பவில்லை. இதற்கிடையே கன்னியாகுமரி மாவட்ட கடலோரத்தில் சில பகுதிகளில் கடல் பச்சை நிறத்தில் மாறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பச்சை நிறம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு அரபிக்கடல் பகுதியான மணவாளக்குறிச்சி முதல் பெரியவிளை வரையிலான பகுதிகளில் கடல் திடீரென பச்சை நிறத்தில் மாறியுள்ளது. அது மட்டுமின்றி பச்சை நிறமாக மாறியுள்ள கடல் பகுதிகளில் இருந்து வழக்கத்திற்கு மாறாகத் துர்நாற்றமும் வீசுவதாகக் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மீன்கள் உயிரிழக்கக் கூடும் என்று மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்

அதிக சீற்றம்
கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு அரபிக்கடல் ஆழ்கடல் பகுதியாகும். இதனால் பொதுவாகவே மற்ற கடல் பகுதிகளைக் காட்டிலும் இங்குக் கடலில் அலைகளின் சீற்றம் சற்று அதிகமாகவே இருக்கும் இதற்கிடையே இப்போது வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக இந்தப் பகுதியில் காற்றின் வேகமும் அதிகரித்து உள்ளது. காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்படுகிறது.

துர்நாற்றம்
அப்படி சீற்றத்துடன் எழும்பும் கடல் அலைகள் இப்போது திடீரென பச்சை நிறத்தில் மாறியுள்ளது. அது மட்டுமன்றி இந்த பெரிய அலைகள் நுரையுடன் கரையில் மோதி செல்கிறது. பச்சை நிறத்தில் இருக்கும் இந்த கடல் அலைகளால் குடியிருப்பு பகுதிகளில் திடீரென துர்நாற்றமும் வீசி வருகிறது. இதனால் சிறிய வகை மீன்களும் உயிரிழக்கக் கூடும் என மீனவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மீனவர்கள்
பொதுவாகக் கடலில் உள்ள பூங்கோரை பாசிகளால் கடல் நீர் பச்சை நிறமாக மாறும். இதனால் சிறிய வகை மீன்களின் செதில்கள் பாதிப்படைந்து உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது. ஆனால் அரபிக்கடல் போன்ற ஆழ்கடல் பகுதிகளில் இது போன்ற பாசிகள் வர அதிக வாய்ப்புகள் இல்லை என்பதால் மீனவர்கள் குழப்பமடைந்து உள்ளனர். இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்குமோ என்றும் அச்சமடைந்துள்ளனர்.

ஆய்வு செய்ய வேண்டும்
தற்போது அரபிக்கடல் பகுதியில் கடல் நீர் பச்சை நிறமாக மாற பூங்கோரை பாசிகள் தான் காரணமா இல்லை வேறு ஏதும் ரசாயன கழிவுகள் காரணமா என்பது குறித்து மீன்வளத் துறையினர் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடல் பகுதிகள் இப்படி திடீரென பச்சை நிறத்தில் மாறியது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications