குமரியில் கனமழை.. தடிக்காரங்கோணம் பகுதியில் தொட்டிப்பாலம் நிரம்பி வழிந்தோடும் வெள்ளம்.. வீடியோ
கன்னியாகுமரி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள தடிக்காரங்கோணம் தொட்டிப் பாலத்தில் நீர் நிரம்பி வழியும் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. சென்னையில் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவில் மழை பெய்தது.
அதே வேளையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் மிக கனமழை தொடர்ந்து பெய்து வந்தது. ஏற்கெனவே தென்மேற்கு பருவமழையால் அந்த மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் நிரம்பியுள்ள நிலையில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டி வருகிறது.

கன்னியாகுமரியில் மழை
சென்னை மழை குறித்த கவலையையே சில ஊடகங்கள் கொண்டிருந்த நிலையில் தமிழ்நாடு என்றால் அது சென்னை மட்டுமல்ல என நெட்டிசன்கள் விமர்சித்தனர். இந்த நிலையில் கன்னியாகுமரியில் பெய்து வரும் மழை அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இந்த மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

ரப்பர் தோட்டம்
வாழை தோட்டங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. அது போல் ரப்பர் தோட்டங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. பல்வேறு சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

திற்பரப்பு அருவி
தொடர் மழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளம் சீறிப்பாய்கிறது. கன்னியாகுமரியில் பெய்து வரும் தொடர் கனமழையால் நாகர்கோவில் ஒழுகினசேரி பழைய ஆற்றில் தண்ணீர் நிரப்பி புரவசேரி பகுதியில் ஊருக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. சண்முகபுரம், முஞ்சிறை, செண்பகராமன் புதூர், சென்னித்தோட்டம், குழித்துறை, லாயவிளக்கு உள்ளிட்ட பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மக்களை பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டு நிவாரண முகாம்களுக்கு அழைத்து செல்கிறார்கள்.

வெதர்மேன்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2010ஆம் ஆண்டுக்கு பிறகு பெய்த மழையில் இதுதான் மிகவும் அதிகமான மழை என வெதர்மேன் தெரிவித்துள்ளார். இன்று மூன்றாவது நாளாக கனமழை பெய்து வரும் நிலையில் இந்த மழை வரும் திங்கள்கிழமை முதல் குறையும் என்றும் அடுத்த இரு தினங்கள் கேரளாவில் கனமழை பெய்யும் என்றும் வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

கனமழை
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் தடிக்காரங்கோணம் தொட்டிப் பாலத்தில் நீர் நிரம்பி வழிகிறது. இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தொட்டி வடிவில் இருப்பதால் இதற்கு தொட்டிப் பாலம் என பெயரிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் இந்த மழைக்கு கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.












Click it and Unblock the Notifications