கன்னியாகுமரியே கலங்கிப்போச்சு.. கோலம் போடப்போன மணப்பெண்ணின் அக்கா.. திடீர் சம்பவம்.. நின்ற கல்யாணம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே மணப்பெண்ணுக்கு திருமணம் நடத்த முடிவு செய்து திருவிழா கோலத்தில் வீடு இருந்தது. ஆனால் கோலம் போடப்போன மணப்பெண்ணின் சகோதரிக்கு திடீரென நடந்த சம்பவத்தால் திருமணமே நின்று போனது.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகிறது என்று சொல்வார்கள்.. ஏனெனில் திருமணம் எப்படி நடைபெறும், யாருடன் நடைபெறும் என்பதை யாரும் கணிக்க முடியாது. திருமணம் குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் இருக்கும் குடும்பங்கள் திடீரென ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அவர்கள் அத்தனை பேரும் உடைந்துபோவார்கள். திடீரென நடைபெறும் துயரங்கள் திருமண வீட்டை துக்க வீடாக மாற்றிவிடும். கடைசியில் திருமணமும் நின்றுவிடும்.. அப்படியான ஒரு துயரம் பெண் வீட்டாருக்கு நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நடந்த சம்பவம் அந்த மாவட்டத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள ஆலஞ்சி பரவிளை பகுதியைச் சேர்ந்த ஜெகன் பாண்டியன் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பிரபாவுக்கு 32 வயது ஆகிறது. இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள் இவர்கள் அனைவரும் குடும்பத்துடன் வெளிநாட்டில் வசித்து வந்தார்கள்.
இந்தநிலையில் பிரபாவின் தங்கைக்கும், கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் நேற்று (ஜூன் 17ம் தேதி) திருமணம் நடத்த ஏற்பாடு செய்திருந்தார்கள். இதையடுத்து தங்கியின் திருமணத்திற்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பிரபா தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்துவிட்டார்.
கருங்கல்லில் பிரபாவின் தங்கையின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தது. இதனை முன்நின்று பிரபா மற்றும் அவரது குடும்பத்தினர் தான் கவனித்தபடி இருந்தார். திருமணம் இன்னும் சில மணி நேரத்தில் நடைபெற போகிறது என்கிற நிலையில், நேற்று அதிகாலையில் அவர் வீட்டின் முன் பகுதியை சுத்தப்படுத்தி கோலம் போட பிரபா வந்தார்.
அந்த சமயத்தில் பிரபா திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். மணப்பெண்ணின் சகோதரி இறந்ததால் குடும்பத்தினரும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
திருமணம் நடக்க இருந்த வீடு துக்க வீடாக மாறியதால் உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சோகத்தை தொடர்ந்து நேற்று நடக்க இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த கருங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிரபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோலம் போடப்போன மணப்பெண்ணின் சகோதரி திடீரென இறந்த சம்பவம் மற்றும் திருமணம் நின்று போன சம்பவம் கருங்கல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications