மோடி நிகழ்ச்சியில் ஒரு ஷாக்.. தளவாய் சுந்தரத்தை கீழே இழுத்துச் சென்ற பாடிகார்ட்!
Recommended Video
கன்னியாகுமரி: பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியான தளவாய் சுந்தரத்தை, பிரதமரின் பாதுகாவலர் மேடையிலிருந்து கீழே இழுத்துச் சென்ற செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் மத்திய அரசு திட்டங்கள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் பன்னீர் செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இதில் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரமும் கலந்து கொண்டார். பிரதமர் மோடி திட்ட மாதிரி ஒன்றை பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது மேடையில் ஆளுநர், முதல்வர், தம்பிதுரை உள்ளிட்டோர் இருந்தனர். தளவாய் சுந்தரமும் பின்னால் நின்று கொண்டிருந்தார். அப்போது பிரதமரின் பாதுகாவலர் ஒருவர் தளவாய் சுந்தரத்தை கையை வலுக்கட்டாயமாக பிடித்து கீழே கூட்டிச் சென்றார்.
ஈஸ்வரனைத் தொடர்ந்து.. பாஜகவிலிருந்து திமுக இழுத்த 2வது விக்கெட் பாரிவேந்தர்!
முதலில் பாதுகாவலரைப் பார்த்து தளவாய் சுந்தரம் முறைத்தார். ஆனால் பாதுகாவலர் கையை உடும்புப் பிடியாக பிடித்து இழுத்ததால் தர்மசங்கடமடைந்த சுந்தரம் வேறு வழியில்லாமல் இறங்கிப் போக வேண்டியதாயிற்று. தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி என்பவர் தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பாலம் போல இருப்பவர். இந்த பதவியை உருவாக்கியவர் மறைந்த எம்ஜிஆர். கடைசியில் அவருக்கு பிரதமரின் மேடையில் நிற்கக் கூட அனுமதி இல்லாமல் கீழே இழுத்து விடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக விழாவில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், பிரதமர் மோடி இந்திய மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறார். தமிழ்நாடும் அவர் பின்னால் இருக்கிறது" என்றார். கடைசியில் முதல்வருக்குப் பின்னால் இருந்த தளவாய் சுந்தரத்திற்கு மேடையில் இல்லாமல் போய் விட்டது!