கன்னியாகுமரி கோதையாற்றில் நைஸா ஊர்ந்து வந்த முதலை.. நட்ட நடு ஆற்றில் கூவுகிறது கோழி.. இதென்ன புதுசா
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கோதையாற்றில் மீண்டும் முதலை நடமாட்டம் இருப்பதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று தொடர்ந்து சோஷியல் மீடியாவில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... அத்துடன் முதலையை பிடிக்க வனத்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள், அதற்கு மேல் பரபரப்பை அம்மாவட்டத்தில் தந்து கொண்டிருக்கிறது.. என்ன நடந்தது?
கடந்த வாரம் திற்பரப்பு அருகே கோதையாற்றில் முதலை கிடந்ததாக ரப்பர் பால் வெட்டும் தொழிலாளர்கள் ஆச்சரியம் விலகாமல் கூறியிருந்தனர்.. அதாவது பேச்சிப்பாறை அணையிலிருந்து தினமும் சுமார் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதால், கோதையாற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த நவம்பரில் அடித்த புயல் காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் மலைப்பகுதிகளில் இருந்து முதலை இழுத்து வரப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இதனால் கோதையாற்றை பயன்படுத்தும் கிராம மக்கள் மத்தியில் பீதி நிலவி வருகிறது.
அதேபோல கடையல் பேரூராட்சி பகுதியிலும் முதலை நடமாட்டம் இருந்துள்ளது.. தோட்டாவரம்-செங்குழிக்கரை என்ற பகுதியில் குடிநீர் விநியோகத்துக்காக உறைகிணறு அமைக்கப்பட்டுள்ளது..
கன்னியாகுமரி உறைகிணறு
சம்பவத்தன்று இந்த உறைகிணறு அருகே பொதுமக்கள் குளித்துக் கொண்டிருந்தபோது, அதன் மேல் ஏதோ ஒன்று கிடப்பதை கவனித்துள்ளனர். அருகில் சென்று பார்த்தபோதுதான், அது முதலை என்பது தெரிய வந்துள்ளது..
இதனால் அனைவருமே தூரமாக விலகி நின்று முதலையின் நடமாட்டத்தை கவனித்துள்ளனர்.. சிறிது நேரம் அங்கே இருந்த முதலை பிறகு மெல்ல நகர்ந்து தண்ணீரில் விழுந்துவிட்டதாம்.. இந்த காட்சியை பொதுமக்களே தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டனர்.
கோதையாற்றில் முதலை
இதுகுறித்து வனச்சரகர் தரப்பில் சொல்லும்போது, கோதையாற்றில் ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்டபோதும் முதலைக்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை.. பேச்சிப்பாறை அணை பகுதியில் முதலை இருந்ததற்கான ஆதாரமும் இல்லை.. எனினும் மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அதிகாரிகளுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்..
இந்நிலையில், கோதையாற்றில் முதலை நடமாட்டம் உள்ளதால், அந்த பகுதி மக்கள் ஆற்றில் குளிக்கவும், அருகே செல்ல அச்சப்பட்டவாறே உள்ளனர்.. எனவே கோதையாற்றில் உள்ள முதலைகளை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது..
நட்ட நடு ஆற்றில் கோழி
இதற்காக ட்ரோன் கேமரா, பிற கண்காணிப்பு சாதனங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ஆற்றின் நடுப்பகுதியில் ஒரு கம்பத்தை நட்டு, அதில் உயிருள்ள ஒரு கோழியை கட்டி வைத்துள்ளனர். அதாவது முதலைக்கு உணவாக கோழியை காட்டி, அது அந்த இடத்திற்கு வருமா? என்று பார்ப்பதற்காகத்தான் இப்படியொரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.. இந்த கோழி வீடியோவும் இணையத்தில் தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது..
தொழில்நுட்பம் பலவாறாக வளர்ந்துள்ள போதிலும், முதலையை பிடிக்க கோழியை கட்டி வைப்பதா? அதுவும் நடு ஆற்றில் உயிருடன்? என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.. பொதுவாக முதலையை பிடிக்க மீன் அல்லது இறைச்சி வைப்பார்களாம்.. ஆனால் அதை விட்டுவிட்டு, உயிருடன் கோழி எதற்கு? என்று வனத்துறையை கேள்வி எழுப்பி வருகிறார்கள்..
ஆனால் வனத்துறை தரப்பில் இதற்கு பதில் தரப்பட்டுள்ளது.. முதலையின் எடை என்ன? ஆற்றின் எந்த பகுதியில் அதிகமாக நடமாடுகிறது என்றும் கண்டறியப்படுகிறது.. ஆனால் சிலர் இதை தவறாக புரிந்து கொண்டு சமூக ஊடகங்களில் தவறான கருத்துக்களை பரப்புகின்றனர் என்றும் விளக்கி தந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications