பயங்கரம்.. சாலையை கிராஸ் செய்த பெண்.. வேகமாக வந்து மோதிய இளைஞர்.. இருவரும் படுகாயம்!
கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே பருத்திவிளை சந்திப்பில் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகேயுள்ள மேலமணக்குடி பகுதியை சேர்ந்தவர் மேரி ஜெனிபர்(31). தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பிய இவர் பருத்திவிளை சந்திப்பில் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது எதிரே இருசக்கரவாகனம் வருவதை கண்டு பயந்து போய் தனது இரு சக்கர வாகனத்தை நடு ரோட்டிலேயே நிறுத்தி உள்ளார். அப்போது எதிரே நாகர்கோவில் அருகே ராமன்புதூர் பகுதியை சேர்ந்த டென்னில் என்பவரின் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மேரி ஜெனிபரின் இரு சக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் மேரி ஜெனிபர் சம்பவ இடத்திலே தூக்கி வீசப்பட்டார். படு காயத்துடன் சுயநினைவின்றி கிடந்த மேரி ஜெனிபரை மீட்ட அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, மேரி ஜெனிபரை மோதிய இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் டென்னில் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications