எமனாக மாறிய பரோட்டா.. சாப்பிடும் போது தொண்டையில் சிக்கியதால் கட்டிட தொழிலாளி துடிதுடித்து மரணம்
கன்னியாகுமரி: மார்த்தாண்டம் அருகே கட்டிடத் தொழிலாளி ஒருவர் சாப்பிட்டும் போது பரோட்டா தொண்டையில் சிக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் இப்போது மீண்டும் வெப்பம் உச்சம் தொட்டுவிட்டது. இந்த அதீத வெப்பம் தாங்க முடியாமல் ஆங்காங்கே உயிரிழப்பு சம்பவங்கள் கூட பதிவாகி வருகிறது.

இதனால் பொதுமக்கள் மதிய நேரங்களில் வெளியே வர வேண்டாம் என் எச்சரிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது. இது ஒரு பக்கம் என்றால் கன்னியாகுமரியில் சாப்பிடும் போதே ஒருவர் உயிரிழந்த ஷாக் சம்பவம் அரங்கேறியுள்ளது.
பகீர் சம்பவம்: இப்படி கூட சாவு வருமா என்று நினைக்கும் அளவுக்குக் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ஒரு பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு மார்த்தாண்டம் அருகே கட்டிடத் தொழிலாளி ஒருவர் ஆசையாக வாங்கிய பரோட்டாவை சாப்பிட்டுள்ளார். அப்போது அந்த பரோட்டா எதிர்பாராத வகையில் தொண்டையில் சிக்கிய நிலையில், அந்த கட்டடத் தொழிலாளி துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அடுத்துள்ள காஞ்சிரகோடு என்ற இடத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்கு பண்டாரவிளையை சேர்ந்தவர் சனந்தனன்.. 40 வயதான இவர் கட்டுமான தொழிலாளியாக இருந்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது.. இருப்பினும், கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி, மகளுடன் தனியாகச் சென்றுவிட்டார். இதனால் சனந்தனன் தனியாகவே வாழ்ந்து வருகிறார்.
பரோட்டா: சனந்தனன் தனது அம்மா மேரிபாயுடன் வசித்து வந்துள்ளார். இதற்கிடையே புதன்கிழமை இரவு உணவாக இவர் அருகே உள்ள கடையில் இருந்து பரோட்டா வாங்கி வந்துள்ளார்.. பரோட்டாவை பார்சல் வாங்கி வந்த சனந்தனன் வீட்டில் வைத்து அதைச் சாப்பிடத் தொடங்கியுள்ளார்.
அவர் பரோட்டா சாப்பிட தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே பரோட்டா தொண்டையில் சிக்கியுள்ளது. இதனால் அவருக்கு விக்கலும் ஏற்பட்டுள்ளது. விக்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து தாயார் மேரிபாயிடம் தண்ணீர் வாங்கி குடித்துள்ளார். இருப்பினும், சில நிமிடங்களிலேயே சனந்தனன் அதே இடத்தில் சுருண்டு விழுந்தார். அங்கு மயங்கிய நிலைக்குச் சென்றார்.
அலறல்: இதைப் பார்த்து தாயார் மேரிபாய் அலறிய நிலையில், உடனடியாக அருகில் இருந்த உறவினர்கள் அங்கு வந்துள்ளனர். அங்குச் சனந்தனன் சுருண்டு விழுந்து மயங்கி நிலையில் இருப்பதைப் பார்த்த அவர்கள், உடனடியாக சந்தனனை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சனந்தனன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து மேரிபாய் அளித்த புகாரின் அடிப்படையில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆசையாக வாங்கிய பரோட்டாவே இவருக்கு எமனாக மாறிய பகீர் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications