நாகர்கோவிலை அதிர வைத்த புதுப்பெண் மரணம்.. போலீஸ் விசாரணைக்கு பயந்து மாமியாரும் விஷம் குடித்தார்
கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே சுசீந்திரத்தில் செண்பகவல்லி என்பவருடைய மகன் கார்த்தியை திருமணம் செய்த கோவையைச் சேர்ந்த புதுப்பெண் சுருதிபாபு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட மாமியார் செண்பகவல்லி விசாரணைக்கு பயந்து விஷம் குடித்தார். இதனால் உடனே செண்பகவல்லியை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சுசீந்திரம் தெற்குமண் பகுதியை சேர்ந்த நாகராஜன், செண்பகவல்லி (வயது 48) தம்பதியின் மகன் கார்த்திக் (27). கார்த்திக் மின்வாரியத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். கார்த்திக்கிற்கு, கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த பாபுவின் மகள் சுருதி பாபு (24) என்பவரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பிறகு சுருதி பாபு சுசீந்திரததில் உள்ள கணவர் வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் புதுப்பெண் சுருதிபாபு கடந்த 21-ந் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து மகளின் தற்கொலையால் அதிர்ச்சி அடைந்த பாபு குடும்பத்தினருடன் சுசீந்திரம் போலீசில் புகார் அளித்தனர். அதில், மாமியாரின் கொடுமையால் தனது மகள் தற்கொலை செய்ததாக கூறியிருந்தார்கள். இதுதொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மறுபக்கம் திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் நாகர்கோவில் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்கள். நாகர்கோவில் கோட்டாட்சியர் நேரடியாக வந்து, கணவர் கார்த்திக், மாமியார் செண்பகவல்லி மற்றும் சுருதி பாபுவின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்..
இதனிடையே மறுமகள் சுருதி பாபு தற்கொலை விவகாரத்தால் மாமியார் செண்பகவல்லி மிகுந்த மன வருத்தத்தில் இருந்தாராம். இந்தநிலையில் போலீஸ் விசாரணைக்கு பயந்து நேற்று மதியம் 2.30 மணிக்கு வீட்டில் இருந்த செண்பகவல்லி திடீரென விஷத்தை குடித்து விட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனே செண்பகவல்லியை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் உறவினர்கள் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த விவகாரத்தில் போலீஸ் விசாரணைக்கு பயந்து குற்றம்சாட்டப்பட்ட மாமியாரும் விஷம் குடித்த சம்பவம் நாகர்கோவில் சுசீந்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications