குமரியில் கொடி நாட்டிய நாம் தமிழர்... நகர்புற உள்ளாட்சி தேர்தலில் முதல் வெற்றி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கப்பியறை பேரூராட்சி முதல் வார்டில் நாம் தமிழர் கட்சியின் பெண் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகத்தில் பிப்ரவரி 19ல் நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் 279 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.

இதனால் ஓட்டு எண்ணும் மையங்கள் அருகே பல்வேறு கட்சி தொண்டர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் குவிந்துள்ளனர். ஓட்டு எண்ணும் மையங்களின் உள்ளே ஒரு வேட்பாளருக்கு 3 முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த தேர்தலில் அனைத்து நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சியிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில் இன்றைய வாக்கு எண்ணிக்கையில் நாம் தமிழர் கட்சி வெற்றி கணக்கை துவக்கியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கப்பியறை பேரூராட்சி முதல் வார்டில் நாம் தமிழர் வேட்பாளர் ஆன்சி சோபா ராணி வெற்றி பெற்றுள்ளார். இந்த வார்டில் இவரை எதிர்த்து களம் இறங்கிய காங்கிரஸ் வேட்பாளர் டென்னிஸ், அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ஆனந்த ராஜன் ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர். இந்த பேரூராட்சிகளின் பிற வார்டுகளில் தொடரந்து ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications