முகமெல்லாம் புன்னகை.. கையில் 2 ஆயிரம்.. வேலம்மாள் பாட்டி ஞாபகம் இருக்கா.. நேரில் சந்தித்த முதல்வர் !
கன்னியாகுமரி : கொரோனா இரண்டாவது அலையின்போது தமிழக அரசு வழங்கிய 2000 ரூபாய் பணம் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய பரிசு பையுடன் பொக்கை வாயை காட்டி சிரித்து சமூகவலைதளங்களில் வைரலான பாட்டி தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து உள்ளார்.
கொரோனா இரண்டாம் கட்டத்தில் தமிழக அரசால் நிவாரணமாக ரூ. 2,000 மற்றும் மளிகைப் பொருள்கள் அடங்கிய பை வழங்கப்பட்டது.
அப்போது கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கீழகலுங்கடிப்பகுதியைச் சேர்ந்த 90 வயது பாட்டி வேலம்மாள், அரசு வழங்கிய நிவாரணத்தொகை மற்றும் மளிகைப்பொருள்களை பெற்றுக்கொண்டார்.

வேலம்மாள் பாட்டி
கைகளில் பணம் மற்றும் மளிகைப் பொருட்களுடன் வேலம்மாள் பாட்டி மகிழ்ச்சியில் பொக்கை வாய்காட்டி சிரிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் செம வைரலானது. பலரும் அந்த புகைப்படங்களை பகிர்ந்திருந்த நிலையில், தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பகிர்ந்திருந்தார்.

முதல்வர் ஸ்டாலின்
அந்தப் புகைப்படத்தை முதல்வர் ஸ்டாலின், இந்த ஏழைத் தாய்மார்களின் சிரிப்பே, நமது அரசின் சிறப்பு' எனக் குறிப்பிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் செய்திருந்தார். அதையும் பலர் பகிர்ந்ததோடு ஆயிரக்கணக்கில் கமெண்ட் செய்திருந்தனர்.

நாகர்கோவிலில் ஆய்வு
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இவற்றை சரி செய்ய தமிழக அரசு நிதி ஒதுக்கி, அந்த பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணிகளை பார்வையிட முதல்வர் ஸ்டாலின் நாகர்கோவில் வந்துள்ளார்.

நேரில் சந்திப்பு
இந்நிலையில் பொக்கை வாய் காட்டி சிரிந்து பேமஸ் ஆன வேலம்மாள் பாட்டி முதலமைச்சரை நேரில் சந்தித்து, தனக்கு முதியோர் ஓய்வு ஊதியம் பெற்று தந்தமைக்காக நன்றி தெரிவித்துள்ளார். இந்த புகைப்படமும் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.












Click it and Unblock the Notifications