தியானம் முடிந்து வெளியே வரப்போகும் மோடி.. விவேகானந்தர் பாறையில் இருந்து சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்
கன்னியாகுமரி: விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்ற சுற்றுலா பயணிகள் திடீரென அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் மோடி, தியானத்தை நிறைவு செய்ய இருப்பதால் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் கடலுக்கு நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் சுமார் 45 மணி நேரம் தியானம் செய்கிறார். நேற்று முன்தினம் மாலை தனது தியானத்தை தொடங்கிய பிரதமர் மோடி, இன்று பிற்பகல் வரை தியானத்தை தொடர்ந்து வருகிறார். தியானத்திற்கு இடையே இளநீர், பழச்சாறு உள்ளிட்ட திரவ உணவுகளை மட்டுமே பருகி வருகிறார் பிரதமர் மோடி.

கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இன்று காலை மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது. பிரதமர் மோடி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொண்டு வருவதையடுத்து, விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல நேற்றுமுன் தினம் பிற்பகல் முதலே பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று காலை முதல் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது.
பிரதமர் மோடி அங்கு தியானம் செய்து வருவதன் காரணமாக கடும் பாதுகாப்பு சோதனைக்கு பிறகு விவேகானந்தர் மண்டபம் செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். அதே சமயம், செல்போன்கள் மூலம் வீடியோ எடுக்கவும் கேமரா கொண்டு செல்லவும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கியதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்தனர். எனினும், பிரதமர் மோடி தியானம் செய்யும் தியான மண்டபத்திற்கு அனுமதி இல்லை. ஸ்ரீபாத மண்டபம் வரை பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதன்பிறகு 11.30 மணிக்கு மேல் விவேகானந்தர் பாறையில் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அங்கிருந்து திடீரென வெளியேற்றப்பட்டனர். மேலும், காலை முதல் நடந்து வந்த சுற்றுலா படகு சேவையும் நிறுத்தப்பட்டது. திடீர் வெளியேற்றத்தால் சுற்றுலா பயணிகள் குழம்பினர்.
இந்நிலையில் இன்று (ஜூன் 1) காலையில் மீண்டும் விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. இன்று காலை 8.30 மணி முதல் தீவிர பாதுகாப்பு சோதனை, கடும் கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் பாறைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சற்று முன்பு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் பாறையில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்டு உள்ளனர். படகு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தியானத்தை நிறைவு செய்ய உள்ளதால் விவேகானந்தர் பாறைக்கு சுற்றுலா பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி இன்னும் சிறிது நேரத்தில் தியானத்தை நிறைவு செய்ய உள்ளார். அதைத்தொடர்ந்து, தனி படகில் விவேகானந்தர் பாறையில் இருந்து 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு செல்ல உள்ளார். அங்கு திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு, அங்கிருந்து கரைக்குத் திரும்பி, ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரம் கிளம்ப உள்ளார். அங்கிருந்து விமானத்தில் டெல்லி புறப்படுவார்.
இதையொட்டியே, சுற்றுலா பயணிகள் அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி இன்று 3 மணியளவில் கன்னியாகுமரி கடலில் இருந்து புறப்பட இருக்கிறார்.












Click it and Unblock the Notifications