வாஜ்பாய் - மோடி வித்தியாசம் இல்லை.. நாட்டிற்காக தங்களை அர்ப்பணித்தவர்கள்.. பொன் ராதாகிருஷ்ணன் பளீச்
கன்னியாகுமரி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயிக்கும் பிரதமர் மோடிக்கும் எவ்வித வேறுபாடுகளும் இல்லை என்றும் இருவரும் நாட்டின் வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் என்றும் கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் ஒன் இந்தியா தளத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அத்துடன் இணைந்த கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்குக்கும்பி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
கன்னியாகுமரியில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் வசந்தகுமார் முதல்முறையாகப் போட்டியிடுகிறார். அதேபோல பாஜக சார்பில் மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.
அரசு மருத்துவமனை கல்லூரி
பொன். ராதாகிருஷ்ணன் ஒன் இந்தியா தளத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், பொதுமக்களிடம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தனக்குப் பல மடங்கு அதிகமாக ஆதரவு கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும் கன்னியாகுமரி தொகுதியில் தான் எம்பியாக இருந்தபோது, தான் அரசு கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், கடந்த முறை மார்த்தாண்டம், சுசீந்தரம் போன்ற நெருக்கடி அதிகம் உள்ள பகுதிகளில் பாலங்களையும் கட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்
மக்கள் சேவை
பொது வாழ்க்கையில் ஈடுபட தொடங்கி 35 ஆண்டுகள் ஆகிறது என்று கூறிய அவர், இதுவரை தான் எவ்வித சொத்துகளையும் சேர்த்துக் கொண்டதில்லை என்றும் தொடர்ந்து மக்களுக்காகச் சேவை செய்து வருவதாகவும் அவர் கூறினார். மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தைத் தொழில் வளம் மற்றும் சுற்றுலாத் துறையில் மேம்பட்ட ஒரு மாவட்டமாக மாற்றுவேன் என்று அவர் தெரிவித்தார். பாஜக ஏதோ ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் எதிரான கட்சி என்பதைப் போலப் பொய்யான பிரசாரத்தைச் சிலர் மேற்கொள்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
திமுகவுக்கு கேள்வி
அதிமுக எம்எல்ஏகள் பாஜக கட்சியினர் போலச் செயல்படுவதா திமுக சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த அவர், "1999 மற்றும் 2001ஆம் ஆண்டு பாஜக-திமுக கூட்டணி இருந்தபோது, திமுக சார்பில் வென்றவர்கள் பாஜக உறுப்பினர்களாகவே செயல்பட்டார்கள்? பாஜக கூட்டணியில் இருந்தபோது திமுகவால் ஊழல் செய்ய முடியவில்லை. ஆனால், காங்கிரஸ் கூட்டணியில் திமுக பல கோடி ரூபாய்க்கு ஊழல் செய்தது" என்றும் தெரிவித்தார்.
வாஜ்பாய்-மோடி
மேலும், வாஜ்பாயும் மோடி ஒன்றல்ல என்று கூறுவது வாதமல்ல, அது ஒரு பக்கவாத நோய் என்றும் அவர் விமர்சித்தார். காங்கிரஸ் பல துரோகங்களை திமுகவுக்குச் செய்துள்ளது என்றும் அதனால்தான் கூடா நட்பு கேடில் முடியும் என்று கருணாநிதியே கூறியிருந்தார் என்றும் அவர் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியைப் போலப் பிரதமர் மோடி யாருக்கும் துரோகம் செய்ததில்லை. ஊழலை ஒழித்து நாட்டின் வளர்ச்சியாகத் தன்னை அர்ப்பணித்தவர் மோடி. அதேபோலத்தான் வாஜ்பாயும் இவருக்கும் இடையே வித்தியாசம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.