சாத்தான்குளம் சம்பவம்: பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.10 கோடி, எஸ்.பி. டிரான்ஸ்பர்- வசந்தகுமார்
கன்னியாகுமரி: சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகன் சிறைச்சாலையில் வைத்து மரணமடைந்த சம்பவம் தொடர்பாக கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார் கன்னியாகுமரி தொகுதி, எம்பியும், தமிழ்நாடு காங்கிரஸின் செயல் தலைவருமான வசந்தகுமார்.
Recommended Video
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர் பெனிக்ஸ் மற்றும் ஜெயராஜ் ஆகியோர் போலீசாரால் தாக்கப்பட்டு சிறைச்சாலையில் வைத்து மரணமடைந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இதனை கண்டித்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தமிழக அரசு காவல் துறையினரால், தாக்கப்பட்டு இறந்த தந்தை மகனுக்கு தலா 10 லட்சம் வீதம், 20 லட்சம் ரூபாய் நிதி வழங்க அறிவித்துள்ளது.
இறந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு தலா 5 கோடி வீதம் 10 கோடி ரூபாய் வழங்க வேண்டும். மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
மேலும் கொடூரமாக தாக்கிய போலீஸ் அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும். தவறான தகவல் கொடுத்துள்ள தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை இடமாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு வசந்தகுமார் அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications