மேற்கு வங்க நபர் மீது சந்தேகம்.. பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்.. போலீஸ் விசாரணை
மார்த்தாண்டம் : கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் மேற்கு வங்கத்கதைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை தீவிரவாதி என்ற சந்தேகத்தில் பொதுமக்கள் பிடித்து கொடுத்ததின் பேரில் உளவு பிரிவு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குரும்பேற்றி பகவதியம்மன் கோயில் மற்றும் விரிகோடு பகுதிகளில் சந்தேகம் அளிக்கும் படியாக சுற்றித்திரிந்த இளைஞர் ஒருவரை பொதுமக்கள் பிடித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அப்போது அவரை போலீசார் சோதனை செய்தபோது எர்ணாகுளம், நாகர்கோவில் இறச்சகுளம் போன்ற பகுதிகளிலுள்ள செயல்பட்டு வரும் அமிர்தானந்தமயி கல்லூரி முகவரி மற்றும் சமீபத்தில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் சம்பந்தமான நோட்டீஸ்கள் மற்றும் சில பேப்பர்கள் இருந்ததை கண்டனர். அவரிடம் விசாரித்தபோது காது கேட்காமல் இருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து உளவுப்பிரிவு மற்றும் கியூ பிரிவு போலீசார் அவனிடம் விசாரணை நடத்தினர்.
அந்த நேரத்தில் அடையாள அட்டை இருந்ததை பார்த்த போது
நைவ்சாத் அலி 32 மேற்கு வங்கம் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை தக்கலை தலைமை மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்று காது கேளாதவரா அல்லது காது கேளாதோர் போல் நடிக்கிறாரா இவர் தீவிரவாதியா அல்லது அவரது மாநிலத்தில் ஏதாவது வழக்கில் சிக்கி விட்டு குமரி மாவட்டத்தில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருகிறாரா என்பன பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நாகர்கோவில் இறச்சகுளம் அமிர்தானந்தமயி கல்லூரியில் தமிழக கவர்னர் மற்றும் மாதா அமிர்தானந்தமயி கலந்துகொண்ட சுமார் 20, 000 பேர் பங்கேற்ற வெள்ளிமலை சமயவகுப்பின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஆகவே அந்த கல்லூரி முகவரி இருந்ததால் அப்போது அந்த கல்லூரியில் நாசவேலையில் ஈடுபட வந்தாரா என்று விசாரணை நடந்து வருகிறது.
கோயம்பத்தூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக கடந்த வாரம் சோதனைகள் தீவிரப்படுத்தி இருந்த நிலையில் தற்போது தீவிரவாதி என சந்தேகத்தின் பேரில் குமரி மாவட்டத்தில் இளைஞர் ஒருவரை கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.