முதல்வர் காரில் மேயர் பிரியா புட்போர்ட்! வந்து விழுந்த கேள்வி! சிரித்து கொண்டே பதிலளித்த தமிழிசை
கன்னியாகுமரி: முதல்வரின் வாகனத்தில் சென்னை மேயர் தொங்கிய படி சென்ற விவகாரம் சர்ச்சையாகியுள்ள நிலையில், இது தொடர்பாகத் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனும் கருத்து கூறியுள்ளார்.
சென்னை காசிமேட்டில் புயல் பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவருடன் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் உடன் சென்றனர். அப்போது சென்னை மேயர் பிரியா காரில் தொங்கியபடி பயணித்தார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நெடடிசன்கள் பலரும் இதை விமர்சித்தனர். இதனிடையே இது தொடர்பாக தெலங்கானா ஆளுநர் தமிழிசையிடம் கேட்ட போது அவர் சிரித்தவாறே பதிலளித்தார்.

ஆளுநர் தமிழிசை
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கோட்டகம் ஸ்ரீ கிருஷண்சுவாமி திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட திருமண்டபத்தைத் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் திறந்துவைத்தார். முன்னதாக கோட்டகம் ஸ்ரீகிருஷ்ணசுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து அங்கு செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை ஜி20 மாநாடு குறித்தும் சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

ஜி20 மாநாடு
செய்தியாளர்களிடம் ஆளுநர் தமிழிசை, "பெண்களுக்காக மிகப்பெரிய கொள்கையை வகுத்துக் கொடுத்தவர் பாரதி. அவரது பிறந்த நாளான இன்று அவரை நினைவு கூருகிறேன்.ஜி 20 மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி இந்த ஜி20 உலக மாநாட்டில் இந்தியா தலைமை தாங்கும் செய்தியைக் கிராமந்தோறும் மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என கூறினார். இதற்காகப் பல இடங்களில் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். தமிழகத்தில் 4 இடங்களிலும் ஐதராபாத்தில் 6 இடங்களிலும் புதுவையில் 1 இடத்தில் மாநாடுகள் நடைபெறுகிறது. இந்தியா மழுக்க இப்படி மொத்தம் 200 மாநாடுகளை நடைபெறவுள்ளது

இளைஞர்களுக்குக் கோரிக்கை
இந்த மாநாட்டில் யோகா, ஆன்மீகம், உணவு என எதெல்லாம் உலக நாடுகளுக்கு இந்தியா கொடுக்கலாம் என மக்கள் நினைக்கிறார்களோ அதைக் காட்சிப்படுத்தலாம். இந்த மாநாட்டில் இளைஞர்கள் தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்த முடியும். இளைஞர்கள் ஸ்டார்ட்அப் நிறுவனங்களாக எதாவது புதிய முயற்சியைச் செய்தால் அதை அவர்கள் நிச்சயம் காட்சிப்படுத்தலாம். இந்தியா சர்வதேச அரங்கில் முக்கிய இடத்தை பிடிப்பதை இந்த ஜி20 மாநாடு காட்டுகிறது" என்றார்.

மதம் சார்ந்து
தொடர்ந்து மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த அவர், "ஆளுநராக இருப்பதால் மதம்சார்ந்து பேசமுடியாது. அனைத்து மத நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறேன். மேலும், அனைத்து மத பண்டிகைகளுக்கும் வாழ்த்துக் கூறி வருகின்றேன். ஆனால், எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருப்பவர்கள் மட்டுமே ஏன் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி விழாக்களுக்கு வாழ்த்துக் கூறுவதில்லை. இதற்கு எனக்கு விடை கிடைக்கவில்லை. எம்மதமும் சம்மதம் என்ற கொள்ளையை அனைவரும் கடைப்பிடிக்கவேண்டும். நான் இப்படிக் கூறுவதால் ஆளுநர் இப்படிப் பேசலாமா என்று சிலர் கேட்கலாம். தனிநபராக எனது கருத்தைக் கூற எனக்கு உயிமையுண்டு. இது தான் அனைத்து மக்களின் எதிர்பார்ப்பு.

மேயர் பியியா குறித்த கேள்வி
சென்னை மேயர் பியியா முதல்வரின் வாகனத்தில் தொங்கியபடி சென்றது குறித்து செய்தியாளர் கேள்விக்குச் சிரித்துக் கொண்டே ஆளுநர் தமிழிசை, "பாரதி பிறந்தமண்ணில் பெண்கள் மதிக்கப்படவேண்டும்.. சென்னை மேயர் விருப்பட்டுதான் முதல்வரின் வானத்தில் தொங்கியபடி சென்றாரா என்பது தெரியாததால் இது குறித்துக் கூறத் தான் விரும்பவில்லை" என்றார். குமரி இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி, பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

என்ன நடந்தது
மாண்டஸ் புயல் காரணமாக கொட்டிவாக்கம், பாலவாக்கம் பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை நேற்று முதல்வர் ஸ்டாலின், நேரில் ஆய்வு செய்தார். அப்பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். அதைத் தொடர்ந்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்குச் சேதமடைந்த படகுகளையும் பார்வையிட்டார். முதல்வர் காசிமேட்டிற்கு காரில் சென்றபோது சென்னை மேயர் பிரியா மற்றும் ஆணையர் ககன் தீப் சிங் பேடி முதல்வரின் காரில் தொங்கியபடி சென்றனர். இந்த வீடியோ தான் இணையத்தில் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது.












Click it and Unblock the Notifications