குமரியில் ஒரு குன்றத்தூர் "அபிராமி".. உப்புமாவில் விஷம் கலந்து ஒன்றரை வயது குழந்தை கொலை.. தாய் கைது
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கள்ளக்காதலனை திருமணம் செய்து கொள்ள சேமியா உப்புமாவில் விஷம் கலந்து ஒன்றரை வயது குழந்தையை கொலைசெய்து விட்டு நாடகமாடிய தாயை போலீஸார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே குளக்கச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ்(34). கொத்தனாராக இருந்து வருகிறார். இவரது மனைவி கார்த்திகா( 21). இவர்களுக்கு சஞ்சனா என்ற மூன்றரை வயது பெண் குழந்தை உள்ளது. அது போல் சரண் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தையும் இருந்தது.
இந்நிலையில் வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை சரண் திடீரென எலிக்காக வைத்த விஷப்பொடியை சாப்பிட்டு மயக்கமடைந்ததாக தாய் கார்த்திகா தனது கணவர் ஜெகதீஷுக்கு தகவலளித்துள்ளார். குழந்தை மயக்கமடைந்ததாக கூறியதை கேட்டதும் வேலைக்கு சென்றிருந்த ஜெகதீஷ் பதறி அடித்து கொண்டு வீடு வந்தார்.

ஜெகதீஷ்
இதையடுத்து வீட்டிற்கு வந்த ஜெகதீஷ் குழந்தை சரணை எடுத்துகொண்டு மார்த்தாண்டம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மார்த்தாண்டம் காவல்துறையினர் குழந்தை சரணின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணை
மேலும் காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் விஷம் கலந்த பொடியை குழந்தையே சாப்பிட்டதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. இந்த மரணம் சந்தேகமளிக்கிறது என்பதால் காவல் நிலையத்திற்கு கார்த்திகாவையும் ஜெகதீஷையும் போலீஸார் அழைத்து விசாரணை நடத்தினர்.

செல்போன்
அப்போது கார்த்திகாவின் செல்போனை வாங்கி போலீஸார் சோதனை செய்தனர். அதில் அனைத்து கால் அழைப்புகளும் டயல் லிஸ்ட்டில் இருந்து அழிக்கப்பட்டிருந்தன. இது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து சைபர் கிரைம் போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த செல் போனிற்கு பல ஆண்கள் தொடர்பு கொண்டிருப்பது தெரிய வந்தது.

மாரயபுரம் காய்கறி கடை
இதில் மாரயபுரம் பகுதியை சேர்ந்த காய்கறி கடை நடத்தும் சுனில் என்பவருடன் அதிக நேரம் பேசியிருப்பதும் இந்த சம்பவம் நடந்த நேரத்தில் பலமுறை பேசியதும் தெரியவந்தது. இதையடுத்து கார்த்திகாவிடம் போலீஸார் அவர்கள் ஸ்டைலில் விசாரணை நடத்தினர். மேலும் சுனிலையும் போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.

திருமணமானது தெரியாது
அப்போது கார்த்திகாவிற்கு திருமணம் ஆகி குழந்தை இருப்பது தனக்கு தெரியாமல் அவருடன் பழகி வந்ததாகவும் தெரிந்தவுடன் அந்த பெண்ணிடம் பேசுவதை நிறுத்தியதாகவும் சுனில் கூறினார். இதையடுத்து கார்த்திகாவிடம் நடந்த விசாரணையில் அவர் கூறுகையில் சுனிலை காதலித்தேன். ஆனால் என்னால் மறக்க முடியவில்லை.

எலி பவுடர்
எனக்கு திருமணமாகி, குழந்தைகள் இருப்பதால்தான் என்னை விட்டு சுனில் விலகி செல்கிறான். ஒரு வேளை குழந்தைகளை கொன்றுவிட்டால் அவனுடன் சேர்ந்து வாழலாம் என நினைத்தேன். இதனால் குழந்தைகளை கொல்ல திட்டமிட்டேன். ஒரே நாளில் எலி பவுடர் வாங்கி வந்து உடனே கொன்றால் சந்தேகம் ஏற்படும் என்பதை உணர்ந்தேன்.

எலித் தொல்லை
இதனால் சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் எலித் தொல்லை அதிகமாக இருக்கிறது. அதனால் எலி மருந்து வாங்கி வருமாறு கணவரிடம் சொன்னேன். அவரும் வாங்கி வந்தார். அந்த எலி மருந்தை தினந்தோறும் வீட்டில் தூவி வந்தேன். அது போல் ஊர் மக்கள் பார்க்கும் போது வீட்டில் எலி தொல்லை ஜாஸ்தியாக இருக்கு, அதனால் மருந்து தூவுகிறேன் என சொல்லி வந்தேன்.

சேமியா உப்புமாவில் விஷம்
சம்பவத்தன்று வீட்டில் சேமியா உப்புமா செய்தேன். இது எனது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஒன்றரை வயது மகனுக்கு கொடுப்பதற்கு முன்னர் அந்த உப்புமாவை நுகர்ந்து பார்த்தேன். அதிலிருந்து மருந்து வாசனை ஏதும் வரவில்லை. இதனால் ஒன்றரை வயது குழந்தைக்கு கொடுத்தேன். ஆனால் மூத்த மகள் குறைவாக சாப்பிட்டதால் அவர் தப்பிவிட்டார் என வாக்குமூலம் அளித்தார். அன்பு, பாசம், அக்கறை கலந்து சேமியா உப்புமாவை அம்மா ஊட்டுவதாக நினைத்த குழந்தை, தாயின் சதித் திட்டம் தெரியாமலேயே விரும்பி சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குன்றத்தூர் அபிராமி
சென்னை குன்றத்தூரில் பிரியாணி கடைக்காரருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் அபிராமி, தனது இரு குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொன்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கு உடந்தையாக இருந்து திட்டத்தை தீட்டி கொடுத்த கள்ளக்காதலன் சுந்தரமும் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications