இன்ஸ்டா போஸ்ட்.. ஸ்கெட்ச் போட்ட நண்பர்கள்.. துண்டு துண்டாக வெட்டி வாலிபர் கொலை.. கரூரில் அதிர்ச்சி
கரூர்: கரூரில் இளைஞர் ஒருவர் ஆறு துண்டுகளாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. நண்பனின் கொலைக்கு பழிக்குப் பழி வாங்குவதற்காகவும், இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்ட ஒரு போஸ்டுக்காகவும் நண்பர்களே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கரூர் மாவட்டம், தெற்கு காந்தி கிராமம் அருகே உள்ள கம்பன் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ஜீவா (19) எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். விடுமுறைக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்த ஜீவா ஜூலை 21 ஆம் தேதி காணாமல் போயுள்ளார். அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஜீவாவை அவரது நண்பா்கள் மற்றும் உறவினா்கள் பல்வேறு இடங்களிலும் தேடி அலைந்துள்ளனர். ஆனால், ஜீவா கிடைக்கவில்லை.

இதையடுத்து, தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் அவரது பெற்றோா் கடந்த 22 ம் தேதி புகாா் அளித்தனா். புகாரின்பேரில் இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சந்தேகத்தின்பேரில் 9 பேரிடம் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், தொழிற்பேட்டை சிட்கோ தொழிற்சாலைக்குப் பின்புறம் உள்ள பாழடைந்த கட்டடங்களுக்குப் பின்புறம் உள்ள முள்புதரில் ஜீவா கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து, கரூர் சரக டிஎஸ்பி செல்வராஜ் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கரூர் வட்டாட்சியர் குமரேசன் முன்னிலையில் புதைக்கப்பட்டிருந்த ஜீவாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கை, கால்கள், உடலை ஆறு துண்டுகளாக வெட்டிக் கொலை செய்து புதைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, ஜீவாவின் உடல் சம்பவ இடத்திலேயே உடற்கூறாய்வு செய்யப்பட்டது.
விசாரணையில், ஜீவாவின் வீட்டின் அருகே வசிக்கும் அவரது நண்பரான சசிகுமாா் (19) உள்ளிட்ட 9 பேர் ஜீவாவை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் அவர்களைக் கைது செய்துள்ளனர். 2 பேர் மட்டும் சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் கொலை நடந்த இடம் குறித்து அடையாளம் காட்டியுள்ளனர்.
போலீஸாா் விசாரணையில், கடந்த 2021 ம் ஆண்டு வடக்கு காந்தி கிராமம், பெரியாா் நகரைச் சோ்ந்த மோகன்ராஜ் என்பவரை அவரது நண்பரான பசுபதிபாளையத்தைச் சோ்ந்த தா்மா என்கிற கிருஷ்ணமூா்த்தி மதுவில் விஷம் கலந்துகொடுத்து கொலை செய்துள்ளார். அந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்த ஜீவாவைக் கொலை செய்ய சசிகுமார் திட்டமிட்டுள்ளார். மேலும், கொலை செய்யப்பட்ட ஜீவா கடந்த சில நாட்களுக்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சசிகுமாாின் புகைப்படத்தை போஸ்ட் செய்து அவரது தலை சிதைக்கப்படும் எனப் பதிவிட்டுள்ளாா். இதனால் கடும் ஆத்திரமடைந்த சசிகுமாா் குடிப்பதற்காக அழைத்து, போதையில் இருந்த ஜீவாவை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications