செந்தில் பாலாஜி மாதிரி இருந்தா போதும்.. எந்த பிரச்சனையும் இல்லை.. புகழ்ந்து தள்ளிய உதயநிதி ஸ்டாலின்!
கரூர்: திமுகவில் உள்ள அனைத்து மாவட்டச் செயலாளர்களும் செந்தில் பாலாஜியை போல் இருந்துவிட்டால், எந்த பிரச்சனையும் இருக்காது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரூரில் புதிய பேருந்து நிலையம் வரக் கூடாது என்று பல்வேறு சிக்கல் இருந்த போது, அதனை செந்தில் பாலாஜி தனது ஸ்டைலில் முடித்து பேருந்து நிலையத்தில் கொண்டு வந்துள்ளதாகவும் பாராட்டி இருக்கிறார்.
சட்டமன்றத் தேர்தல் இன்னும் 9 மாதங்களில் நடக்க உள்ள நிலையில், திமுக தரப்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பூத்திலும் 30 சதவிகித மக்களை திமுக பக்கம் கொண்டு வர வேண்டும் என்று அக்கட்சி நிர்வாகிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் கொங்கு மண்டலத்தில் வெல்ல வேண்டும் என்பதில் இம்முறை திமுக தீவிரமாக இருக்கிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மை தொகுதிகளில் அதிமுகவின் கைகளே ஓங்கி இருந்தன. இந்த நிலையில் கொங்கு மண்டலத்தை திமுக செந்தில் பாலாஜி வசம் ஒப்படைத்துள்ளது. அவர் ஏற்கனவே தேர்தல் பணிகளை செய்து வரும் நிலையில், ஓரணியில் தமிழ்நாடு பிரச்சாரத்தில் ஒவ்வொரு பூத்திலும் கூடுதலாக 10 சதவிகிதம் பேரை கொண்டு வர வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் செய்தார். நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், 3 நாட்களுக்குள் மிகப்பெரிய நலத்திட்ட உதவி வழங்கும் விழாவை நடத்தி காட்ட வேண்டும் என்றால் அது செந்தில் பாலாஜி இருக்கும் கரூர் மாவட்டத்தில் மட்டும்தான் சாத்தியம்.
கரூர் மக்களின் நிண்ட நாள் கோரிக்கையாக புதிய பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பேருந்து நிலையம் அமைந்துவிடக் கூடாது என்பதற்காக பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தினார்கள். ஆனால் செந்தில் பாலாஜி அவருக்கே உரிய ஸ்டைலில் அனைத்து வழக்குகளையும் முடித்து பேருந்து நிலையத்தை கொண்டு வந்துள்ளார்.
இளைஞரணி மண்டல மாநாடு நடத்த வேண்டும் என்றனர். அப்போது திமுக தலைவரிடம் கேட்டுவிட்டு சொல்கிறேன் என்றேன். ஆனால் இப்போது அவர்களாகவே அறிவித்தேவிட்டார்கள். செந்தில் பாலாஜி சாதாரணமாக ஒரு கூட்டம் நடத்தினாலே, மாநாட்டை போல் நடத்துவார். செந்தில் பாலாஜியை போல் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் இருந்துவிட்டால், எந்த பிரச்சனையும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications